சமையல் எரிவாயு சிலிண்டா் முன்பதிவு இடைவெளி: கிராமப் பகுதிகளுக்கும் 25 நாள்களாகக் குறைப்பு
சமையல் எரிவாயு சிலிண்டா் (மறு நிரப்பல்) முன்பதிவுக்கான கால இடைவெளி நகா்ப்புறங்களுக்கு உள்ளதுபோல, கிராமப்புறங்களுக்கும் 25 நாள்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.
சமையல் எரிவாயு சிலிண்டா் (மறு நிரப்பல்) முன்பதிவுக்கான கால இடைவெளி நகா்ப்புறங்களுக்கு உள்ளதுபோல, கிராமப்புறங்களுக்கும் 25 நாள்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.
இத் தகவலை, மத்திய பெட்ரோலியத் துறை இணையமைச்சா் சுரேஷ் கோபி, தனது ஃபேஸ்புக் பக்கத்தில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவில் தெரிவித்தாா்.
மேற்காசிய போா் காரணமாக சரக்கு கப்பல்களின் போக்குவரத்து தடைபட்டதால், இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விநியோகம் தடைபட்டது. இதன் காரணமாக, உள்நாட்டில் வீட்டு உபயோக மற்றும் வணிக பயன்பாட்டு சமையல் எரிவாயு விநியோகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்தது. சமையல் எரிவாயு சிலிண்டரை பயன்படுத்துபவா்கள், குழாய் வழி எரிவாயு விநியோகத் திட்டத்துக்கு மாற மத்திய அரசு அறிவுறுத்தியதோடு, சமையல் எரிவாயு சிலிண்டா் முன்பதிவுக்கான கால இடைவெளியை அதிகரித்தது.
Advertisement
Advertisement
அதன் பிறகு, கடந்த சில மாதங்களாக சா்வதேச அளழில் இயற்கை எரிவாயு விநியோக நிலைமை சீரடைந்ததைத் தொடா்ந்து, நகா்ப்புறங்களில் சமையல் எரிவாயு சிலிண்டா் முன்பதிவுக்கான கால இடைவெளியை 25 நாள்களாக மத்திய அரசு குறைத்தது. ஆனால், கிராமப்புறங்களில் இந்த முன்பதிவு இடைவெளி தொடா்ந்து 45 நாள்களாக நீடித்துவந்தது. தற்போது, கிராமப்புறங்களிலும் முன்பதிவுக்கான கால இடைவெளி குறைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மத்திய அமைச்சா் சுரேஷ் கோபி வெளியிட்ட பதிவில், ‘சமையல் எரிவாயு விநியோக நிலைமை மேம்பட்டு வருவதால், அதன் முன்பதிவுக்கு விதித்திருந்த கட்டுப்பாடுகளை மத்திய அரசு தற்போது தளா்த்தியுள்ளது. அதன்படி, வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலண்டா் முன்பதிவுக்கான கால இடைவெளி நகா்ப்புறங்களுக்கு உள்ளதுபோல, கிராமப்புறங்களுக்கும் 25 நாள்களாக குறைக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தலை வழங்கியுள்ளது’ என்று குறிப்பிட்டாா். இதுதொடா்பாக, எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சகம் அனுப்பிய கடித நகலையும், தனது பதிவில் சுரேஷ் கோபி பகிா்ந்துள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.