3 பாஜக நியமன எம்.எல்.ஏக்கள் புதுச்சேரி பேரவைக்கு சென்றது மகிழ்ச்சி: கிரண்பேடி
பாஜக நியமன எம்.எல்.ஏ.க்கள் வி.சாமிநாதன், கே.ஜி.சங்கர், எஸ்.செல்வகணபதி ஆகியோர் புதுச்சேரி பேரவைக்கு சென்றது மகிழ்ச்சி
புதுச்சேரி : பாஜக நியமன எம்.எல்.ஏ.க்கள் வி.சாமிநாதன், கே.ஜி.சங்கர், எஸ்.செல்வகணபதி ஆகியோர் புதுச்சேரி பேரவைக்கு சென்றது மகிழ்ச்சி அளிக்கிறது என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
ஆளுநர் கிரண் பேடி, உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி நியமன எம்.எல்.ஏ.க்களை பேரவையில் அனுமதிக்க வேண்டும் என்ற நிர்பந்தத்துடன் நிதி ஒதுக்கீட்டு மசோதாவுக்கு அனுமதியளித்தார்.
அத்துடன் நியமன எம்.எல்.ஏ.க்களை பேரவைக்குள் அனுமதிக்க வேண்டும் என்று தொடர்ந்து சமூக வலைதளங்கள் மூலமும், ஊடக சந்திப்பு மூலமும் நிர்பந்தித்து வந்தார். அதை ஏற்கும் வகையில் நேற்று புதன்கிழமை 3 நியமன எம்.எல்.ஏ.க்களுக்கும் பேரவை நிகழ்வுகளில் பங்கேற்கலாம் என்று கடிதம் அனுப்பப்பட்டது. அதையடுத்து பேரவை நிகழ்வுகளில் நியமன எம்எல்ஏக்கள் முதல்முறையாக பங்கேற்றனர்.
Advertisement
Advertisement
நியமன எம்எல்ஏக்களாக நியமிக்கப்பட்ட பாஜக மாநிலத் தலைவர் வி.சாமிநாதன், கே.ஜி.சங்கர், எஸ். செல்வகணபதி ஆகியோர் பேரவைக்கு வருவதற்கு முன்பு மணக்குள விநாயகர் கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.
பின்னர் கோயிலில் வழங்கப்பட்ட தாமரைப்பூ பிரசாதத்துடன் சட்டப்பேரவைக்குள் வந்தனர். அப்போது மூவரும் பேரவையின் படிக்கட்டை தொட்டு வணங்கி உள்ளே வந்தனர்.
பின்னர், பேரவைத் தலைவர் வைத்திலிங்கம், முதல்வர் நாராயணசாமி ஆகியோரை அவர்களது அலுவலகம் சென்று சந்தித்துப் பேசினர். அதன் பின்னர் பேரவைக்குள் சென்று நிகழ்வுகளில் பங்கேற்றனர்.
உச்ச நீதிமன்ற எதிர்பார்ப்புக்கு இணங்க 3 பேரையும் பேரவையின் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க அனுமதித்துள்ளேன். இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் 11.9.18 அன்று விசாரணைக்கு வருகிறது. அதுவரை மட்டுமே இந்த அனுமதி பொருந்தும். அதன் பின்னர் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றார். இதையடுத்து, தீர்மானத்தை குரல் வாக்கெடுப்புக்கு பேரவைத் தலைவர் வைத்திலிங்கம் விட்டார். இதைத் தொடர்ந்து பெரும்பாலான உறுப்பினர்கள் ஆம் என்று தெரிவித்ததால், தீர்மானம் நிறைவேறியதாக பேரவைத் தலைவர் அறிவித்தார்.
இந்நிலையில், பாஜக நியமன எம்.எல்.ஏ.க்கள் 3 பேரும் புதுச்சேரி பேரவைக்கு சென்றது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் அவர்கள் 3 பேரும் பேரவைக்கு சென்றதால் நீதிநிலை நாட்டப்பட்டுள்ளது என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.