சுதந்திர தினத்தில் தில்லியில் தாக்குதல் நடத்த சதி: குண்டுகளுடன் வந்த பயங்கரவாதி கைது
தில்லியில் நடைபெறும் சுதந்திர தினவிழாவில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் பயங்கரவாதிகள் திட்டமிட்டு உள்ளதாக உளவுத்துறை
புதுதில்லி: தில்லியில் நடைபெறும் சுதந்திர தினவிழாவில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் பயங்கரவாதிகள் திட்டமிட்டு உள்ளதாக உளவுத்துறை நேற்று எச்சரிக்கை விடுத்திருந்தது.
நாட்டின் 72-வது சுதந்திர தினம் வருகிற 15-ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவின் போது தில்லியில் மிகப்பெரும் தாக்குதலை நடத்த பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
பாகிஸ்தான் உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ.யின் ஆதரவுடன் தில்லியில் சுதந்திர தினத்தன்று இரு இடங்களில் தாக்குதலை அரங்கேற்ற திட்டமிட்டு 5 பயங்கரவாதிகள் இந்தியாவில் ஊடுருவி இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.
Advertisement
Advertisement
உளவுத்துறை எச்சரிக்கையை அடுத்து தில்லியில் முக்கியமான இடங்களில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுதந்திர தினவிழாவுக்காக தில்லியில் பல அடுக்கு பாதுகாப்பு போட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மக்கள் கூடும் பொது இடங்கள், குறிப்பாக போக்குவரத்து நிலையங்கள், கோவில்கள், தேவாலயங்கள், விமான நிலையங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போட்டப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், காஷ்மீரில் போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தபோது, 8 வெடிகுண்டுகள் மற்றும் ரூ.60 ஆயிரம் பணத்துடன் காஷ்மீரில் இருந்து தில்லிக்கு சென்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தை சேர்ந்த ர்பான் ஹசன்வானி என்ற பயங்கரவாதி என்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஆகஸ்ட் 15-ஆம் தேதி நடைபெறும் சுதந்திர தின விழாவில் தாக்குதல் திட்டமிட்டிருந்ததாகவும், தாக்குதல் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக தில்லி புறப்பட்டது தெரிய வந்துள்ளது.
மேலும், ஜம்மு மற்றும் தில்லியில் தாக்குதல் நடத்த காஷ்மீரில் செயல்பட்டு வரும் லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்சி இ முகம்மது, ஹிஸ்புல் முஜாஹிதீன் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புக்கள் திட்டமிட்டுள்ள தகவலும் கிடைத்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.