வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட்டார் ஓபிஎஸ்
வைகை அணை நிரம்பியதையடுத்து விவசாய பாசன தேவைக்காக இன்று அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
வைகை அணை நிரம்பியதையடுத்து விவசாய பாசன தேவைக்காக இன்று அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணை மதகுகளை மலர்தூவி திறந்துவைத்தார்.
வைகை அணைக்கு கடந்த சில ஆண்டுகளாக போதிய நீர்வரத்து இல்லை. இதனால் அணை முழு கொள்ளளவை எட்டவில்லை. கடைசியாக கடந்த 2015-ஆம் ஆண்டு அணை நிரம்பியது.
அதைத்தொடர்ந்து கடந்த 3 ஆண்டுகளாக நீர் வரத்து இல்லாததால் விவசாயம் பாதிக்கப்பட்டதோடு, குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டது. இந்நிலையில், இந்த ஆண்டில் கேரளத்தில் பெய்து வரும் கனமழையால் முல்லை பெரியாறு அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது. இதனால், முல்லை பெரியாற்றில் இருந்து 2,200 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
மேலும் கம்பம், போடி பகுதிகளில் இருந்து வரும் சிற்றோடைகள் மற்றும் மூல வைகையாற்றில் இருந்து வரும் நீரின் மூலம் வைகை அணைக்கு 3,336 கன அடி நீர் வரத்து உள்ளது.
இதனால் வைகை அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்தது. அணையில் 66 அடிக்கு நீர் உயர்ந்ததையடுத்து, முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிகை விடப்பட்டது. அதைத்தொடர்ந்து, கடந்த சனிக்கிழமை 68.5 அடியை அடைந்ததையடுத்து இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.
இந்நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணி அளவில் வைகை அணை 69 அடியை எட்டியதை அடுத்து வைகை அணை தற்போது 28-ஆவது முறையாக நிரம்பியதும் மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு, அணைக்கு வரும் 3,336 கன அடி உபரி நீர் மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டது.
இதனிடையே, வைகை அணையிலிருந்து பாசனத்திற்காக ஆகஸ்ட் 20-ஆம் தேதி முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்திருந்தார். அதன்படி வைகை அணை இன்று திறக்கப்பட்டது.
அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீரை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மலர்தூவி அணை மதகுகளை திறந்துவைத்தார். வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு, வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், கதர் மற்றும் கிராமத்தொழில்கள் துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன், தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ், மதுரை மாவட்ட கலெக்டர் வீரராகவராவ், தேனி நாடாளுமன்ற உறுப்பினர் பார்த்திபன், கம்பம் சட்டப்பேரவை உறுப்பினர் ஜக்கையன் மற்றும் பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
வைகை அணையில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதன் மூலம் மதுரை, திண்டுக்கல் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் 1 லட்சத்து 5,002 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.