முகப்பு
தற்போதைய செய்திகள்

ஒசூர் மாநகராட்சியின் முதல் திமுக மேயர்

ஒசூர் மாநகராட்சியின் முதல் மேயர் திமுகவை சேர்ந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், ஒசூர் திமுக பொறுப்பாளருமான எஸ்.ஏ.சத்யா தேர்வு செய்வதற்கு வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

Updated On : 23 பிப்ரவரி 2022, 12:13 pm IST
ஒசூர் மாநகராட்சி
பகிர்:

ஒசூர் மாநகராட்சியின் முதல் மேயர் திமுகவை சேர்ந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், ஒசூர் திமுக பொறுப்பாளருமான எஸ்.ஏ.சத்யா தேர்வு செய்வதற்கு வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

சிற்றூராக இருந்த ஒசூர் 1962-ஆம் ஆண்டு பேரூராட்சியாக உயர்த்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து வேகமாக வளர்ச்சி அடைந்த ஒசூர் 1992 ஆம் ஆண்டு இரண்டாவது நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. 

1998-ல் தேர்வு நிலை நகராட்சியாக உயர்ந்தது. ஒசூரில் இரண்டு சிப்காட் கொண்டு வந்ததால் 150-க்கும் மேற்பட்ட பெரிய தொழிற்சாலைகளும், 3000-க்கும் மேற்பட்ட சிறு குறு நடுத்தர தொழிற்சாலைகளும் ஒசூரை நோக்கி வந்ததால் பல லட்சம் தொழிலாளர்கள் வேலைக்காக ஒசூர் நோக்கி வந்தனர். 

Advertisement

Advertisement

இதனால் ஒசூர் மிக வேகமான வளர்ச்சியை அடைந்தது. இதனைத்தொடர்ந்து சிறப்பு நிலை நகராட்சியாக இருந்த ஒசூருடன் சூவாடி, மூக்கண்டப்பள்ளி மத்திகிரி பேரூராட்சி ஆவலபள்ளி, சென்னத்தூர் ஆகிய ஊராட்சிகளை ஓசூர் நகராட்சியுடன் இணைத்து தமிழக அரசு ஒசூரை மாநகராட்சியாக தரம் உயர்த்தியது. 

இதனைத்தொடர்ந்து ஒசூர் மாநகராட்சிக்கு முதன்முறையாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்.19-ல்நடைபெற்றது. நகராட்சியில் இருந்து 33 வார்டுகள் 45 ஆக மாறியன. இதில் திமுக சார்பில் நாற்பத்தி இரண்டு வேட்பாளர்களும், காங்கிரஸ் சார்பில் மூன்று வேட்பாளர்களும் போட்டியிட்டனர்.

அதிமுக சார்பில் 44 பேர் போட்டியிட்டனர். திமுகவை சேர்ந்த 21 பேர் வெற்றி பெற்றுள்ளனர். காங்கிரசை சேர்ந்த ஒருவர் வெற்றி பெற்றுள்ளார். திமுகவில் சீட்டு கிடைக்காதவர்கள் சுயேச்சையாக போட்டியிட்டு 5 பேர் வெற்றி பெற்றுள்ளனர். மேலும்  காங்கிரஸ் 1, பாஜக 1, பாமக 1 வெற்றி பெற்றுள்ளார். பாமகவில் வெற்றி பெற்ற வேட்பாளர் திமுகவில் இணைந்தார். 

அவருக்கு திமுக மாவட்ட செயலாளர் ஒய். பிரகாஷ் சால்வை அணிவித்து வரவேற்றார். தற்போது திமுகவுக்கு 22 மாமன்ற உறுப்பினர்களும், காங்கிரஸ் சார்பில் ஒருவரும், 23 பேர் உள்ளதால் ஒசூர் மாநகராட்சி திமுக வசமானது. 

இதைத்தவிர சுயேச்சையாக போட்டியிட்ட அனைவரும் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். 28 மாமன்ற உறுப்பினர்கள் வியாழக்கிழமை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற செல்கின்றனர். குறிப்பாக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், தற்பொழுது ஒசூர் மாநகராட்சி திமுக பொறுப்பாளருமான எஸ்.ஏ., சத்யா மேயராக வாய்ப்பு அதிகம் உள்ளது. 

பொதுமக்களால் எதிர்பார்க்கப்பட்டவர்களும் மேயர் கனவில் இருந்த மாவட்ட அவைத்தலைவர் ஆ.யுவராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் தா.சுகுமாரன் மற்றும் முன்னாள் ஒசூர் ஒன்றிய குழு தலைவராக இருந்த புஷ்பா சர்வேஷ் உள்ளிட்டோர் இந்த நகர்ப்புற தேர்தலில் தோல்வியை தழுவினர். 

இது திமுகவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஒசூர் மாநகராட்சியில் வெற்றிபெற்ற கட்சி விபரம். திமுக-21, அதிமுக-16, சுயேட்சைகள்- 5, காங்.1, பாஜக - 1, பாமக- 1.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.