குற்றவாளிகளுடன் பாஜக நிற்பது வெட்கக்கேடானது! - ராகுல்காந்தி
கடந்தாண்டு, பட்டியலினப் பெண் பாஜகவினரின் பாலியல் துன்புறுத்தலினால், நீதி பெறாமல் மரணமடைந்ததைச் சுட்டிகாட்டி, ராகுல் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கடந்தாண்டு, மத்தியப் பிரதேசத்தில் பட்டியலினப் பெண் ஒருவர் பாஜகவினரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு, நீதி பெறாமல் மரணமடைந்ததைச் சுட்டிக் காட்டி ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ராகுல் காந்தி, அப்பதிவில் ”மத்தியப் பிரதேசத்தில் உள்ள பட்டியலினப் பெண்ணின் குடும்பத்திற்கு பாஜகவினர் என்ன செய்தார்கள் என்பதைப் பற்றி நினைத்தால் என் இதயம் வலியாலும் கோபத்தாலும் நிரம்பி வழிகிறது.
பாஜக, பாதிக்கப்பட்டவர்களுக்கு பதிலாக, எப்போதும் குற்றவாளிகளுடன் நிற்பது வெட்கக்கேடானது. சட்டத்தின் மூலம் நீதியைப் பெற முயலும் ஒவ்வொரு நபரின் தைரியத்தையும் இதுபோன்ற சம்பவங்கள் உடைக்கின்றன. ஒடுக்குமுறைக்கு எதிராக, குரலை வலுவாக உயர்த்தக்கூடிய ஓர் அமைப்பை நாங்கள் உருவாக்குவோம் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். நீதியானது பணம் மற்றும் அதிகாரத்தை சார்ந்திருப்பதை நாம் அனுமதிக்க முடியாது” என்று குறிப்பிட்டுள்ளார்.
Advertisement
Advertisement
கடந்தாண்டு, மத்தியப் பிரதேசத்தில் பாஜகவினர் ஒரு தலித் சிறுமியை பாலியல் துன்புறுத்தி, அதனை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்றும் மிரட்டியிருந்தனர். சிறுமி தனது குடும்பத்தினரிடம் நடந்த சம்பவத்தை விவரித்த பின்னர் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதனையடுத்து, பாஜகவினர் சிறுமியின் குடும்பத்தினரை வழக்கினைத் திரும்பப் பெறுமாறு அழுத்தம் கொடுக்கத் தொடங்கினர். குடும்பத்தினர் சமரசத்திற்கு உடன்படாதபோது, சிறுமியின் சகோதரர் கொல்லப்பட்டார். சில நாள்களுக்குப் பிறகு, சிறுமியின் மாமா சமரசத்திற்கு அழைக்கப்பட்டு, அவரும் கொல்லப்பட்டார்.
சிறுமி ஆம்புலன்ஸில் தனது மாமாவின் உடலுடன் கிராமத்திற்கு வந்து கொண்டிருந்தபோது சிறுமியும் ஆம்புலன்ஸிலிருந்து விழுந்து இறந்துவிட்டார். ஒரு வருடத்திற்குள், இரண்டு கொலைகள் நடந்துள்ளன. பாஜகவினர் மீது பாலியல் துன்புறுத்தல் குற்றம் சாட்டிய ஒரு தலித் சிறுமி சந்தேகத்திற்கிடமான நிலையில் மரணமடைந்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.