ஒடிசா மாநிலம் தியோகார் மாவட்டத்தில் வீட்டின் சுவரை உடைத்து யானை தாக்கியதில் பெண் ஒருவர் பலியாகியுள்ளார்.
தியோகாரின் குண்டெய்கோலா வனப்பகுதியிலிருந்து நேற்று (மார்ச் 18) அதிகாலை காட்டு யானை ஒன்று உணவுத் தேடி திலேய்பாசி கிராமத்தினுள் புகுந்துள்ளது.
அப்போது, அதிகாலை 2 மணியளவில் அந்த கிராமத்திலுள்ள ஓர் வீட்டின் சுவரை மோதி உடைத்துள்ளது. இதில், அந்த வீட்டினுள் தூங்கி கொண்டிருந்த பூஜா மஹார் (வயது 35) என்ற பெண் தப்பிக்க முயன்ற போது அவரை அந்த யானை தாக்கியுள்ளது. இதனால், அவர் சம்பவயிடத்திலேயே பலியானார்.
மேலும், சுவர் இடிந்து விழுந்ததில் பூஜாவின் கணவர் ஜித்து மஹார் (42) மற்றும் அவரது இரு மகன்களான டெபாஷிஷ் (5) மற்றும் பிரத்யூஷ் மஹார் (9) ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, சத்தம் கேட்டு அங்கு விரைந்த கிராமவாசிகள் அந்த யானையை அங்கிருந்து விரட்டி வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.
இதையும் படிக்க: ஆண்களுக்கு வாரம் 2 மதுபாட்டில்கள் இலவசம்: கர்நாடக எம்எல்ஏ கோரிக்கை!
பின்னர், படுகாயமடைந்த தந்தை மற்றும் மகன்களை மீட்டு உடனடியாக செண்டிபடா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர்களது உடல்நிலை தற்போது நலமாகவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தினால் கோவமடைந்த கிராமவாசிகள் வனத்துறையினரின் அலட்சியப் போக்கே பெண்ணின் மரணத்திற்கான காரணம் எனக் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், பலியான பெண்ணின் குடும்பத்துக்கு அரசின் நெறிமுறைகளைப் பின்பற்றி இழப்பீடு வழங்கப்படும் எனவும் வனத்துறையினர் அந்த யானையை கண்டுபிடித்து அது மக்கள் குடியிருப்பின் அருகில் வராமலிருப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.
முன்னதாக, இதே குண்டெய்கோலா வனப்பகுதியின் அருகிலுள்ள சங்கபாசி கிராமத்தில் கடந்த ஜனவரி 14 அன்று 50 வயதுடைய பெண் ஒருவரை யானை தாக்கியதில் அவர் பலியானது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.