பனீர் என்பது பனீர் மட்டுமல்ல! யூரியா, சோப்புத்தூள், செயற்கை ரசாயனமாக இருக்கலாம்!
பனீர் என்பது பாலில் தயாரிக்கப்படுவது மட்டுமல்ல, யூரியா, சோப்புத்தூள், செயற்கை ரசாயனமாகக்கூட இருக்கலாம்!
நாடு முழுவதும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாடு அமைப்பு நடத்திய சோதனைகளில், கலப்பட பனீர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
நடப்பாண்டில், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாடு அமைப்பு நடத்திய சோதனையில், 83 சதவீத பனீர்கள் கலப்படமானவை என்றும், உணவுக் கட்டுப்பாடு மற்றும் தரக் குறியீடுகளை அவைத் தொட்டுக் கூடப் பார்க்கவில்லை என்றும், அதிலும் குறிப்பாக 40 சதவிகித பனீர்கள் உடலுக்கு அபாயத்தை ஏற்படுத்தும் வகையில், பாமாயில், சோப்புத் தூள், யூரியா, செயற்கை ரசாயனங்கள் கலந்து உருவாக்கப்பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நொய்டாவில் உள்ள உணவகங்களில், பண்டிகைக் காலத்தை முன்னிட்டு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாடு அமைப்பு நடத்திய சோதனையில் 550 கிலோ கலப்பட பனீர் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
நாடு முழுவதும் அதிகம் கலப்படும் செய்யப்படும் உணவாக பனீர் மாறியிருப்பதாகவும், மக்கள் நிச்சயம் வெளியில் பனீர் வாங்கி சாப்பிடும்போது கவனமாக இருக்க வேண்டும் என்றும் சமூக வலைத்தளம் வாயிலாகவும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாடு அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
சண்டிகர், தில்லி, மும்பை, கோரக்பூர், லக்னௌ உள்ளிட்ட நகரங்களிலும் ஏராளமான உணவகங்களில் பயன்படுத்த வைக்கப்பட்டிருந்த பனீர்கள் கலப்படம் கொண்டவை என்று கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த ஆண்டில் உத்தரப்பிரதேசத்தில் மட்டு 5000 கிலோ பனீர் கலப்படம் மற்றும் தரமற்றது என கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.
சில பனீர்கள் சோப்புத்தூள், யூரியா, சாக்ரின் கொண்டு தயாரிக்கப்பட்டு செயற்கை ரசாயனங்கள் மூலம் உருவாக்கப்பட்டிருக்கின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உணவகங்கள், சில ரூபாய் லாபத்துக்காக, இவ்வாறு போலியான பனீர்களைப் பயன்படுத்தி, உணவகத்துக்கு சாப்பிட வருவோரின் உயிருக்கே உலை வைப்பது குறித்து இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாடு அமைப்பு சமூக வலைத்தளத்தில் விடியோ வெளியிட்டு எச்சரிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.
பனீர் போன்ற சில உணவுகள்தான் வீட்டில் தயாரிக்க முடியாது, உணவகத்தில் நன்றாக இருக்கும் என்றெண்ணி உணவகம் சென்றாலே பனீரை ஆர்டர் செய்து சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், பனீர் இப்போது மிக சாதாரணமாக வீடுகளில் தயாரிக்கலாம் என்பதை விடியோக்களில் பார்த்து வீட்டிலேயே தயாரித்து சாப்பிடுவது நல்லது என்கிறார்கள் சுகாதாரத் துறை நிபுணர்கள்.