முகப்பு
தற்போதைய செய்திகள்

விவசாயக் கடன் – தற்கொலை – தீர்வு குறித்து இந்தியத் தலைமை நீதிபதிக்கு ஒரு பகிரங்கக் கடிதம்!

பருவமழை இந்த ஆண்டும் மோசமானதாக இருக்கும் என்கிற கணிப்பினால் விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கை பெருமளவு அதிகரிக்கும் என்கிற செய்தி பரவி வருவதுதான்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 11:20 AM
பகிர்:

தமிழகத்தில் விவசாயத்துக்குத் தரப்படும் பயிர்கடன், வறட்சி மற்றும் பல்வேறு காரணங்களால் போதுமான விளைச்சல் இல்லாததால் பயிர்கடனைக் கட்ட முடியாமல் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் செயல்கள் அதிகரித்து வருகின்றன.

இது குறித்து தமிழகத்தைச் சேர்ந்த கணிப்பொறி வல்லுநர்கள் குழு, தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை விவசாயத்தில் ஈடுபடுத்துவது குறித்து ஆய்வு செய்து வருகிறது. அக்குழு, பயிர்க்கடன் – விவசாயிகள் தற்கொலை – தீர்வு என்ற வகையில் இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதிக்கு பகிரங்கக் கடிதம் ஒன்றை தினமணி டாட் காம் மூலம் வெளியிட்டுள்ளனர். அதன் விவரம் –

**

மாண்புமிகு இந்திய தலைமை நீதிபதி அவர்களுக்கு,

வணக்கம்.

பொருள்: பயிர்க்கடன் வழங்குவதை நிறுத்துதல் - விவசாயிகளுக்கான முழு பயிர்காப்பீடு, அதிகபட்ச உற்பத்திக்கான தகவல்கள், தரமான இடுபொருள்கள், குறைத்தபட்ச லாபம் உள்ளிட்ட ஒட்டுமொத்த தீர்வு ஏற்படுத்தப்படும் வரை பயிர்க்கடன் கொடுப்பதை நிறுத்திவைத்தல் - விவசாயிகளை கடன் ஆபத்திலிருந்து காப்பாற்றுதல் - தொடர்பாக.

தமிழகத்தை சேர்ந்த கணிப்பொறி வல்லுனர்கள் குழு 15 வருட முயற்சியின் மூலம் தகவல் தொழில்நுட்பத்தின் அபார வளர்ச்சியினை, பயன்பாட்டினை விவசாயிகள் முழு அளவில் பயன்படுத்தி தரம், உற்பத்தி, நிகர லாபம் அதிகமாக்குதல் மற்றும் விவசாயம் செய்வதில் உள்ள கடின தன்மையை இலகுவாக்கும், ஒரு புது இணையத் தளம் சார்ந்த கிராம அளவில் செயல்படும் திட்டத்தை உருவாக்கி, மாதிரி அளவில் வெற்றிகரமாக செயல்படுத்தி, சிறப்பான மதிப்பீடுகளை பெற்றிருக்கிறோம். திட்டமிடுதலில் தொடங்கி விதை முதல் விற்பனை வரையிலான சேவைகளை, கிராம அளவில் செயல்படும் விவசாய மேலாண்மை மையத்தில் குறு, சிறு விவசாயிகளும் பெற்று பலன்பெற முடியும். இந்தத் தீர்வை பெரிய அளவில் அரசாங்கத்துடன் சேர்ந்து விரிவாக்கம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறோம்.

துரதிர்ஷ்டவசமாக விவசாயிகள் தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன. ஆனால் பெரும் ஆபத்து என்னவெனில், பருவமழை இந்த ஆண்டும் மோசமானதாக இருக்கும் என்கிற கணிப்பினால் விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கை பெருமளவு அதிகரிக்கும் என்கிற செய்தி பரவி வருவதுதான்.

வீடு கட்ட, தொழில் தொடங்க, படிப்புக்கு என கடன் வழங்கும்போது கடுமையான விதிமுறைகளை பின்பற்றும் வங்கிகள், அதிக சவால்கள் நிறைந்த விவசாய தொழிலுக்குக் கடன் கொடுக்கும்போது மட்டும் அதிகப்பட்ச விளைச்சலுக்கு தேவைப்படும் தகவல், தரமான இடுபொருள்கள், விளைபொருள்களுக்கான நல்ல விலை, விவசாயிகளுக்குக் கிடைப்பதற்கான தீர்வு இல்லாத நிலையில், கேட்பவர்களுக்கு எல்லாம் அஜாக்கிரதையாக வழங்குகிறது. இந்த அணுகுமுறை விவசாயிகள் கடனாளி ஆவதற்கு வழிவகுத்துவிடுகிறது.

விவசாயத் துறையில் நாங்கள் பெற்றிருக்கும் அனுபவத்தின் அடிப்படையிலும், நாடு நலனில் உள்ள அக்கறையின் அடிப்படையிலும், அரசாங்கத்திடம் நாங்கள் வைக்கும் விண்ணப்பம் என்னவென்றால், விவசாயிகளுக்கான முழு பயிர்காப்பீடு, அதிகபட்ச உற்பத்திக்கான தகவல்கள், தரமான இடுபொருள்கள், குறைத்தபட்ச லாபம் உள்ளிட்ட ஒட்டுமொத்த தீர்வு ஏற்படுத்தப்படும் வரை பயிர்க்கடன் கொடுப்பதை நிறுத்தி வையுங்கள். இல்லையென்றால் விவசாயிகள் பிரச்னைகள், போராட்டங்கள் தொடர்கதையாகி நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் பின்னடைவை உண்டாக்கிவிடும்.

நாட்டின் மிக முக்கியமான இந்தப் பிரச்னையில் மாண்புமிகு இந்தியாவின் தலைமை நீதிபதி அவர்கள் தலையிட்டு விவசாயிகளை கடன் ஆபத்திலிருந்து காப்பாற்றுவதற்கு ஆவண செய்ய வேண்டும்படி பிராத்திக்கிறோம்.

இப்படிக்கு,

தங்கள் உண்மையுள்ள,

Rm. திருச்செல்வம்

(Originator & Project Director, Mission IT-rural)

Email: thiru@it-rural.com; thirurm@gmail.com

Mobile: 98403 74266

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.