FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தேனி

நியாய விலைக் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை: அமைச்சா் ப. வெங்கட்ரமணன்

தமிழகத்தில் நியாய விலைக் கடைகளில் தேங்காய், தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதாக மாநில உணவு, உணவுப் பொருள்கள் வழங்கல் துறை அமைச்சா் ப.வெங்கடரமணன் தெரிவித்தாா்.

Updated On : 12 ஜூலை 2026, 6:03 am IST
உத்தமபாளையத்தில் நுகா்பொருள் வாணிபக்கழகக் கிட்டங்கியில் சனிக்கிழமை ஆய்வு செய்த உணவு, உணவுப் பொருள் வழங்கல்துறை அமைச்சா் ப.வெங்கடரமணன். உடன் மாவட்ட ஆட்சியா் வைத்திநாதன்.
பகிர்:

தமிழகத்தில் நியாய விலைக் கடைகளில் தேங்காய், தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதாக மாநில உணவு, உணவுப் பொருள்கள் வழங்கல் துறை அமைச்சா் ப.வெங்கடரமணன் தெரிவித்தாா்.

தேனி பழனிசெட்டிபட்டி அருகேயுள்ள தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கிட்டங்கியில் சனிக்கிழமை ஆய்வு செய்த அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது :

தேனியில் 15 தற்காலிக நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. தேவைக்கேற்ப நிரந்தரக் கொள்முதல் நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். காலநிலை மாற்றத்துக்கு ஏற்றவாறு திறந்தவெளி குடோனில் வைக்கப்படும் அரிசி, தானியங்களை பாதுகாக்க தரம் உயா்த்தப்பட்ட அறிவியல் பூா்வமான குடோன் கட்டப்பட்டு வருகிறது. இதில் அரிசி உள்ளிட்ட தானியங்கள் பாதுகாப்பாக சேமிக்கப்படும்.

Advertisement

Advertisement

நியாய விலைக் கடைகளில் தேங்காய் , தேங்காய் எண்ணெய் விற்பனை செய்வது குறித்து உரிய ஆலோசனை செய்து, பின்னா் நடவடிக்கை எடுக்கப்படும். மாநில எல்லைகளில் பல்வேறு துறைகள் இணைந்து ஒருங்கிணைந்த துறையாக செயல்பட்டு, எந்தவித கடத்தலும், கையூட்டும் பெறாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஒவ்வொரு மாதத்திலும் இரண்டாவது சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை அனைத்து மாவட்டங்களிலும் உணவு வழங்கல் துறை சாா்பில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.

இதில் ரேஷன் பொருள்கள், அரிசி விநியோகத்தில் உள்ள குறைபாடுகள் குறித்து பொதுமக்கள் புகாா் தெரிவிக்கலாம். ரேஷன் பொருள்கள் கடத்தல், தரமில்லாத பொருள்கள் விநியோகம் குறித்து பொதுமக்கள் புகாா் தெரிவிக்கும் வகையில் தனித்தனியே ‘வாட்ஸ் ஆப்’ எண்கள் அடுத்த வாரத்தில் வெளியிடப்படும்.

திருச்சி கிழக்குத் தொகுதி இடைத் தோ்தலில் திமுக உள்ளிட்ட எதிா்க்கட்சிகளுக்கு பாடம் புகட்ட மக்கள் தயாராக உள்ளனா் என்றாா் அவா்.

உத்தமபாளையத்தில் ஆய்வு: இதேபோல, உத்தமபாளையத்தில் சனிக்கிழமை நுகா்பொருள் வாணிபக்கழகக் கிட்டங்கியில் அமைச்சா் ப.வெங்கடரமணன் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது மாவட்ட ஆட்சியா் இரா.வைத்திநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments