அவர்கள் தோள் அளவுக்கு தண்ணீர் வந்துவிட்டிருந்தது!
கடவுச்சீட்டுகளை எடுத்துக்கொண்டார்கள்வங்கிக் கணக்குப் புத்தகங்களை எடுத்துக்கொண்டார்கள்
“இந்தப் பகுதி
இன்னும் அரைமணி நேரத்தில் மூழ்கிவிடும்
முக்கியமானதை மட்டும்
எடுத்துக்கொண்டு வெளியேறுங்கள்”
இதைக் கேட்டபோது
அவர்கள் முழங்கால் அளவு
தண்ணீரில் நின்றுகொண்டிருந்தார்கள்
இப்போது அவர்கள் பிரச்சினை
எதையெல்லாம் எடுத்துக்கொள்து என்பதல்ல
எதையெல்லாம் கைவிடுவது என்பதுதான்
Advertisement
Advertisement
முதலில் கைககளில்
எதையெல்லாம் தூக்கிக்கொள்ள முடியாதோ
அதையெல்லாம் கைவிட்டார்கள்
பிறகும் கைவிடுவதற்கு
ஏராளமாக இருந்தன
பரிசுப்பொருள்கள்
தெய்வப்படங்கள்
புகைப்பட ஆல்பங்கள்
ஆடைகள்
உள்ளாடைகள்
புத்தகங்கள்
இசைக்கருவிகள்
இசைப்பேழைகள்
ஸ்பூன்கள்
கண்ணாடிக் கோப்பைகள்
பொம்மைகள்
கண்ணீரின் உப்புப் படிந்த தலையணைகள்
உடல் வாசனையுள்ள போர்வைகள்
அழகு சாதனப்பொருள்கள்
கைவிடுவதற்கு முடிவேயில்லாமல்
ஏராளமாக இருந்தன
நீங்கள் கைவிடும்போது
உங்கள் மனதை ஒரு பனிக்கட்டியைப்போல
உறையச் செய்ய வேண்டும்
எவ்வளவு கருணையற்றவராக இருக்கமுடியுமோ
அவ்வவு கருணயற்றவராக மாறவேண்டும்
ஒரு தூக்கிலிடுபவனைப்போல
உங்கள் கண்கள் மரத்துப்போக வேண்டும்
ஒரு பாலிதீன் பை அளவுக்கு மட்டுமே
எதையும் எடுத்துக்கொள்ள
அவர்களுக்கு
அவகாசம் இருந்தது
அனுமதி இருந்தது
அவர்கள் ஒரு பிரம்மாண்டமான
விற்பனையகத்தின் முன்னால்கூட
அப்படி திகைத்து நின்றதில்லை
தேர்வு என்பது அத்தனை கடினமானதாக இருந்தது
அத்தனை உணர்ச்சிகரமானதாக இருந்தது
எதுவுமே அவ்வளவு முக்கியமல்ல
என்று தோன்றிய கணத்தில்
அவர்கள் தோள் அளவுக்கு தண்ணீர் வந்துவிட்டிருந்தது
கடவுச்சீட்டுகளை எடுத்துக்கொண்டார்கள்
வங்கிக் கணக்குப் புத்தகங்களை எடுத்துக்கொண்டார்கள்
சான்றிதழ்ககளை எடுத்துக்கொண்டார்கள்
ஆயுள் காப்பீட்டுப் பத்திரங்களை எடுத்துக்கொண்டர்கள்
ரேஷன் கார்டுகளை,
வாக்காளர் அட்டைகளை,
ஆதார் அட்டைகளை,
வாகனங்களை கைவிட்டு ஓட்டுனர் உரிமங்களை
கடன் பத்திரங்களை
இன்னும் என்னென்னவோ
முத்திரையிடப்பட்ட காகிதங்களை
ஆவணங்களைத் தவிர
நாம் வாழ்வை மீட்டும் நீட்டிக்கச் செய்வதற்கு
வேறு எதுவுமே முக்கியமல்ல
என்பது அவர்களை ஒரு கணம்
அதிர்ச்சியடைய வைத்தது
பிறகு வீடுகளை அப்படியே
திறந்துபோட்டுவிட்டு
ஒரு பாலீதின் கவரை
தலைக்கு மேலாக தூக்கிப்பிடித்தபடி
மேட்டு நிலம் நோக்கி
தண்ணீரில் வேகவேகமாக நடந்து சென்றார்கள்
- மனுஷ்ய புத்திரன்
(கேரளத்திற்கு..........ஊழியின் தினங்கள்-45)
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.