பாரம்பரிய சுற்றுலாவிற்கு ஏற்ற இடமாக மேற்கு வங்கம் தேர்வு: மமதா புகழாரம்!
யுனெஸ்கோ அறிவிப்புக்கு மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி புகழாரம்.
கொல்கத்தா: பாரம்பரிய சுற்றுலாவிற்கு தகுதிவாய்ந்த இடமாக மேற்கு வங்கத்தை யுனெஸ்கோ அறிவித்துள்ளதாகவும், இந்த அறிவிப்பு மாநிலத்தின் சுற்றுலா துறையில் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் எனவும் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேற்குவங்க சட்டப்பேரவையில் அவர் பேசுகையில், பாரம்பரியம், தேயிலை மற்றும் மதம் சார்ந்த சுற்றுலா தளங்களில் மாநில அரசினால் மாபெரும் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகக் கூறினார்.
மேற்கு வங்கத்தில் பாரம்பரிய சுற்றுலா தளங்களை உருவாக்குவதில் மாநில அரசு பல முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக கூறிய அவர், மதம் சார்ந்த சுற்றுலா தளங்களை முன்னேற்றுவதற்கு வழிப்பாட்டு தளங்களான தக்ஷினேஸ்வரர் கோயில் மற்றும் காளிகாட் கோயில் போன்ற இடங்களை மேம்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், திகாவில் கட்டப்பட்டு வரும் ஜெகனாத் கோயிலிம் விரைவில் பக்தர்கள் வழிபாட்டிற்கு திறக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேற்கு வங்கத்திலுள்ள ஒவ்வொரு இடத்தின் தனிச்சிறப்பையும் பிரதானப்படுத்தி எடுக்கப்பட்ட நடவடிக்கைகளினால் அந்தந்த சுற்றுலா தளங்களை சுற்றியிலும், ஆயிரக்கணக்கான உணவகங்கள் திறக்கப்பட்டு இருப்பதாகவும், இதனால் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் இதுகுறித்து அம்மாநிலத்தின் சுற்றுலாத்துறை அமைச்சர் இந்திரானில் சென் கூறியதாவது:
சுமார் 2,489 சுற்றுலா விடுதிகள் மேற்கு வங்கத்தில் திறக்கப்பட்டிருப்பதாகவும், இதில் 65 சதவிகித்திற்கும் மேல் வடக்கு வங்காளத்தில் இடம்பெற்றிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.