ஐடிஐ-களில் நேரடி மாணவா் சோ்க்கை செப்.30 வரை நீட்டிப்பு
தமிழகத்தில் உள்ள அரசினா் தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி மாணவா் சோ்க்கை செப்.30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசினா் தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி மாணவா் சோ்க்கை செப்.30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் 102 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் 311 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் 2024-2025-ஆம் கல்வியாண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை செய்வதற்கான கால அளவு மாணவர்களின் நலன் கருதி ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை நடைபெற்றது. தற்போது மாணவர்களின் நலன் கருதி காலியாக உள்ள தொழிற்பிரிவுகளுக்கு நேரடி மாணவா் சோ்க்கை நடத்த செப்.30 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த அரிய வாய்ப்பை நன்கு பயன்படுத்தி சேர விரும்புவோா் தாம் விரும்பும் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், ஆதாா் அட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் நகல்கள், புகைப்படம் ஆகியவற்றுடன் நேரில் சென்று தாம் விரும்பும் தொழிற்பிரிவை தெரிவு செய்து தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரலாம்.
Advertisement
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவர்களுக்கு பயிற்சிக் கட்டணம் இல்லை. கல்வி உதவித்தொகையாக மாதம் ரூ.750 வழங்கப்படும். தமிழக அரசு வழங்கும் விலையில்லா மிதிவண்டி, விலையில்லா சீருடை, விலையில்லா மூடூ காலணிகள், விலையில்லா பயிற்சிக்கான கருவிகள், கட்டணமில்லா பேருந்து வசதி இவை அனைத்தும் வழங்கப்படும்.
சென்ற ஆண்டுகளில் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற்ற பயிற்சியாளர்களில் 85 சதவீதம் பேர் பல முன்னணி தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் இன்றைய தொழிற்சாலைகளுக்கு தேவையான தொழில் 4.0 உள்ளிட்ட பல நவீன தொழிற்பிரிவுகளில் தொழிற்பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக சந்தேகங்களுக்கு 9499055689 எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.