ஆளுநரின் துணைவேந்தர் மாநாட்டுக்கு எதிராக கம்யூனிஸ்ட் கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
உதகை ராஜ்பவன் மாளிகையில் பல்கலைக்கழக துணைவேந்தா்கள் மாநாடு இன்றும் நாளையும் (ஏப். 25, 26) நடைபெறுகிறது. குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கர் இன்று காலை 11.30 மணிக்கு மாநாட்டை தொடங்கிவைத்து உரையாற்றவுள்ளார். இதற்காக தில்லியில் இருந்து கோவை வந்துள்ள தன்கர், ஹெலிகாப்டர் மூலம் உதகை செல்கிறார்.
இந்த நிலையில் ஆளுநரின் துணைவேந்தர் மாநாட்டுக்கு எதிராக கம்யூனிஸ்ட் கட்சிகள் சென்னையில் போராட்டம் நடத்தி வருகின்றன.
முன்னதாக, தமிழக அரசு பேரவையில் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டிருந்த நிலையில் 10 மசோதாக்களும் ஒப்புதல் அளித்ததாகக் கருதப்படும் என்று சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழக பல்கலைக்கழகங்களின் வேந்தர் பொறுப்பில் இருந்து ஆளுநரை நீக்க வகை செய்யும் சட்டத்திருத்த மசோதாவும் இதில் அடங்கும். அதன்படி பல்கலைக்கழக வேந்தராக இனி முதல்வர் ஸ்டாலின் செயல்படுவார் என்று கூறப்படும் நிலையில் ஆளுநரின் ஏற்பாட்டில் இந்த துணைவேந்தர் மாநாடு நடக்கிறது.
உச்சநீதிமன்ற உத்தரவுக்குப் பின்னரும் ஆளுநர், துணைவேந்தர் மாநாடு நடத்துவது சட்டத்திற்கு எதிரானது என்று கூறி கம்யூனிஸ்ட் கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன.
அரசியல் மாண்புகளுக்கு எதிராக தொடர்ந்து செயல்படும் ஆளுநர் ஆர்.என்.ரவியை உடனே திரும்பப் பெற வேண்டும், தமிழ்நாடு கல்விக்கு ஒதுக்கவேண்டிய ரூ. 2,152 கோடியை உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து சென்னை சாஸ்திரி பவன்முன்பு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாபெரும் முற்றுகைப் போராட்டம் நடத்தி வருகிறது. இதில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டுள்ளனர்.
அதேபோல இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பிலும் சென்னை உள்பட அனைத்து மாவட்டத் தலைநகரகங்களிலும் இன்று கறுப்புக் கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
உதகையில் ஆளுநருக்கு எதிராக திராவிடர் தமிழர் கட்சியினர் கறுப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.