பச்சிளம் குழந்தைகளின் எலும்புகளை உடைத்த கொடூர நர்ஸ் கைது!
அமெரிக்காவில் பச்சிளம் குழந்தைகளின் எலும்புகளை உடைத்த செவிலியர் கைது செய்யப்பட்டதைப் பற்றி...
அமெரிக்காவின் விர்ஜீனியா மாகாணத்திலுள்ள ஹென்ரிக்கோ டாக்டர்ஸ் மருத்துவமனையில் 3 பச்சிளம் குழந்தைகளின் எலும்புகளை உடைத்த கொடூர நர்ஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2023 ஆம் ஆண்டு துவக்கத்தில் அந்த மருத்துவமனையின் பச்சிளங் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட 4 குழந்தைகளின் உடல்களில் மர்மமான முறையில் எழும்பு முறிவுகள் ஏற்பட்டிருந்தன.
அதற்கான காரணங்கள் என்னவென்று தெரியாமல் இருந்த நிலையில், கடந்த 2024 ஆம் ஆண்டின் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் மேலும் 3 குழந்தைகளுக்கு அதேப்போல் உடலில் சில எலும்புகள் முறிந்திருந்தன.
இதனைத் தொடர்ந்து, கடந்த டிச.25 அன்று இந்த குற்றச்செயலில் ஈடுபட்டது யாரென்று கண்டுபிடிக்கும் வரையில் அந்த பிரிவில் வேறு எந்த குழந்தையும் அனுமதிக்கப்படாது என மருத்துவமனை நிர்வாகம் அறிவித்திருந்தது.
இதையும் படிக்க: ஈக்வடார் நாட்டில் அவசரநிலை பிரகடனம்!
இந்நிலையில், மருத்துவமனை நிர்வாகம் மேற்கொண்ட விசாரணையில் நவம்பர் மாதம் 3 குழந்தைகள் மீது இந்த தாக்குதலை நடத்தியதாக அங்கு பணிப்புரியும் செவிலியரான எரின் எலிசபெத் அன் ஸ்ட்ரோட்மான் (வயது 26) என்பவர் மீது சந்தேகம் எழுந்தது.
பின்னர், அந்நிர்வாகம் தரப்பில் அவர் மீது அந்நாட்டு காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் அவர்கள் எலிசபத்திடம் மேற்கொண்ட விசாரணையில் 2024 நவம்பர் மாதம் 3 குழந்தைகளின் எழும்புகளை உடைத்தது அவர்தான் என்பது உறுதிசெய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். அவர் மீது திட்டமிட்டு குழந்தைகள் மீது தாக்குதல் நடத்தியதற்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், அங்குள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி அவர் அந்த மருத்துவமனையில் வேறு ஏதேனும் குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளாரா என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.