ஆளுநர் ஏன் பதவியில் ஒட்டிக்கொண்டிருக்க வேண்டும்? - முதல்வர் மு.க. ஸ்டாலின்
ஆளுநர் தனது உரையை வாசிக்காமல் சென்றுள்ளது சிறுபிள்ளைத்தனமானது என முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
ஆளுநர் தனது உரையை வாசிக்காமல் சென்றுள்ளது சிறுபிள்ளைத்தனமானது என முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
2025 ஆம் ஆண்டின் தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம் இன்று(ஜன. 6) கூடிய நிலையில் ஆளுநர் ஆர்.என். ரவி, தனது உரையை வாசிக்காமல் அவையை விட்டு வெளியேறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்த்தாய் வாழ்த்துக்குப் பின்னர் உடனே தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்று ஆளுநர் கூற, அதற்கு முதல்வர், பேரவைத் தலைவர் மறுத்துவிட்டதால் ஆளுநர் வெளியேறியதாக ஆளுநர் மாளிகை விளக்கம் தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement
முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து, நிகழ்வின் இறுதியில் தேசிய கீதம் என மரபுப்படியே சட்டப்பேரவை நிகழ்வுகள் நடைபெறுவதாகவும் ஆளுநருக்காக மரபை மாற்றம் செய்ய முடியாது என பேரவைத் தலைவர் அப்பாவு கூறியுள்ளார்.
பாஜக கூட்டணியில் உள்ள பாமக, திமுக கூட்டணி கட்சிகள், ஆளுநர் வெளியேறியதற்கு கண்டனம் தெரிவித்துள்ளன.
இதையும் படிக்க | சட்டப்பேரவை மரபை மாற்ற முடியாது! நடந்தது என்ன? - அப்பாவு பேட்டி
இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில்,
அரசியல் சட்டப்படி, ஆண்டின் தொடக்கத்தில் அரசின் உரையை மாநில ஆளுநர் வாசிப்பது சட்டமன்ற ஜனநாயகத்தின் மரபு! அதை மீறுவதையே தனது வழக்கமாக வைத்துள்ளார் ஆளுநர் ஆர்.என். ரவி.
கடந்த ஆண்டுகளில் இருந்ததை வெட்டியும், இல்லாததை ஒட்டியும் வாசித்த ஆளுநர் இம்முறை வாசிக்காமலேயே போயிருப்பது சிறுபிள்ளைத்தனமானது.
தமிழ்நாட்டு மக்களையும், அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசையும், நூற்றாண்டு கண்ட தமிழ்நாடு சட்டப்பேரவையையும் தொடர்ந்து அவமதிக்கும் ஆளுநரின் செயல் அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல.
"தனது அரசியல் சட்டக் கடமைகளைச் செய்யவே மனமில்லாதவர் அந்தப் பதவியில் ஏன் ஒட்டிக்கொண்டிருக்க வேண்டும்?" என்பதே அனைவர் மனதிலும் எழும் வினா!' என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க | ஜன. 11 வரை சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் : அப்பாவு