முகப்பு
தற்போதைய செய்திகள்

4 ஆண்டுகளில் 66,24,955 விவசாயிகளுக்கு ரூ.53,340 கோடி பயிா்க் கடன்: தமிழக அரசு தகவல்

தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் கூட்டுறவு அமைப்புகள் மூலம் 66,24,955 விவசாயிகளுக்கு ரூ.53,340.60 கோடி பயிா்க் கடன் வழங்கப்பட்டுள்ளதாக தொடர்பாக...

Updated On : 20 ஜூலை, 2025 at 4:30 PM
மதுரையில் நடைபெற்ற விழாவில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின்
பகிர்:

சென்னை: தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் கூட்டுறவு அமைப்புகள் மூலம் 66,24,955 விவசாயிகளுக்கு ரூ.53,340.60 கோடி பயிா்க் கடன் வழங்கப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக தமிழக அரசு சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

கூட்டுறவுத் துறை மக்களுக்கு, குறிப்பாக ஏழை எளிய நலிந்த பிரிவு மக்களுக்கு நன்மைகளைச் செய்வதற்கு உருவான ஒரு துறை. இத்துறை மூலம் பல

Advertisement

பணிகள் நிறைவேற்றப்பட்டு மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்துள்ளது, நாடும் வளர்ந்துள்ளது.

கூட்டுறவு சங்கங்களின்  முக்கிய பணி பொதுமக்களுக்கும் தொழில் அமைப்புகளுக்கும் கடன் வழங்கி முன்னேற்றங்களுக்கு வழி வகுப்பதே ஆகும்.

அரசு கூட்டுறவு அமைப்புகள் மூலம் மக்களுக்குக் கடன் உதவிகளை வழங்கி வருகிறது. கடன்களால் மக்கள் சிரமப்பட நேரும் காலங்களில் கடன்களை ரத்து செய்தும் உதவுகிறது அரசு. 

2021 தேர்தலுக்கு முன் தேர்தல் அறிக்கையில் கூறியபடி, கூட்டுறவு நிறுவனங்களில் ஒரு குடும்பத்தில் 5 பவுனுக்கு உட்பட்டு நகைக் கடன் பெற்று 31.3.2021 வரை நிலுவையிலிருந்த நகைக் கடன் தொகை ஏறத்தாழ ரூ. 6,000 கோடியைத் தள்ளுபடி செய்து ஆணையிட்டார்கள். அதன்படி, 11.70 இலட்சம் பயனாளிகளுக்கு ரூ.4,904 கோடி அளவிற்குத்  தள்ளுபடிச் சான்றிதழுடன், அவர்கள் அடமானம் வைத்த நகைகளும் திருப்பி வழங்கப்பட்டுள்ளன. 

அதேபோன்று கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்ட மகளிர் சுயஉதவிக் குழுக் கடன்களில், 31.3.2021 அன்று நிலுவையில் இருந்த  கடன் தொகை ரூ.2,118.80 கோடி தள்ளுபடி செய்யப்பட்டு 1,01,963 மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சார்ந்த 10,56,816 மகளிர் பயன்பெற்றுள்ளனர்.

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான கடன் உச்ச வரம்பு ரூ.20 லட்சம் என்பதை ரூ.30 லட்சமாக உயர்த்தி 1,90,499 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.10,997.07 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

பயிர்க் கடன்களை உரிய கெடு தேதிக்குள் திரும்பச் செலுத்தும் விவசாயிகளுக்கு வட்டியில்லாப் பயிர்கடன்களாக 66,24,955 விவசாயிகளுக்கு ரூ.53,340.60 கோடி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், 11,88,440 விவசாயிகளுக்கு கால்நடை வளா்ப்பு மற்றும் அதன் தொடா்புடைய பணிகளுக்காக ரூ.6,372.02 கோடி கடன் உதவி அளிக்கப்பட்டுள்ளது.

கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கான கடன்கள் ஆண்டிற்கு 5 சதவீத வட்டி விகிதத்தில் 19,358 கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு ரூ.63.22 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், 47,221 மாற்றுத் திறனாளிகள் சுயதொழில் தொடங்க ரூ.225.94 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. 16,578 பணிபுரியும் பெண்களுக்கு ரூ.470.01 கோடியும், 49,000 மகளிா் தொழில் முனைவோருக்கு ரூ.283.27 கோடியும் கடன் வழங்கப்பட்டுள்ளன.

நாட்டுப்புறக்  கலைஞர்களின் சமூக, பொருளாதார, நிதி நிலையை மேம்படுத்தும் வண்ணம், இதுவரை 4,494 நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு ரூ.18.80 கோடி அளவிலான கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.

வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கங்கள், ரூ.392.52 கோடி அளவிற்குத்  தானிய ஈட்டுக் கடன்களும்; ரூ.2,089.90 கோடி அளவிற்கு நகைக்கடன்களும் வழங்கியுள்ளன. இச்சங்கங்கள்,  ரூ.10,283.21 கோடி அளவிற்கு வணிகமும் செய்துள்ளன.

கடந்த ஆண்டு சுதந்திர நாள் விழா உரையில், தமிழகம் முழுவதும் 1,000 முதல்வா் மருந்தகங்கள் திறக்கப்படும் என்ற அறிவிப்பின்படி, மாநிலம் முழுவதும் ஒரே விதமான வண்ணம் மற்றும் தனித்துவமான பெயர்ப் பலகைகளுடன் மூலப் பெயரிலான மருந்துகள், பிராண்டட் மருந்துகள், பாரம்பரிய மருந்துகள் 25 சதவீத தள்ளுபடி விலையில் மக்களுக்கு வழங்கப்படும் எனவும் முதல்வா் அறிவித்தாா்.

அதன்படி, மாநிலம் முழுவதும் 1,000 மருந்தகங்கள் தொடங்கி வைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

புதுதில்லியில் நடைபெற்ற கிடங்கு மேம்பாட்டு ஒழுங்குமுறை ஆணைய விழாவில் 2022 மற்றும் 2023 ஆகிய இரு ஆண்டுகளில் தமிழ்நாட்டில் அதிக எண்ணிக்கையிலான கூட்டுறவுச் சங்கங்களின் கிடங்குகளைக் கிடங்கு மேம்பாட்டு ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவு செய்ததைப் பாராட்டி, இந்திய அரசின் கிடங்கு மேம்பாட்டு ஒழுங்குமுறை ஆணையத்தால் தமிழ்நாடு அரசுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.

மாநிலக் கூட்டுறவு வங்கிகளின் தேசிய இணையம் தமிழ்நாட்டின் கூட்டுறவு வங்கிகளின் சிறப்பான  நிர்வாகத்தைப்  பாராட்டி 2024-இல் 5 விருதுகள் வழங்கியது.

விவசாயிகளுக்குத் தேவையான பயிா்க் கடன்களையும், இடுபொருள்களையும் வழங்கி, அவா்களின் உற்பத்திப் பொருள்களுக்கு நியாயமான விலை கிடைப்பதையும் உறுதி செய்து மத்திய அரசின் பாராட்டுகளையும், விருதுகளையும் பெற்று கூட்டுறவுத் துறையில் இந்தியாவிலேயே உயர்ந்து சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்குகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

summary

Crop loans totaling Rs. 53,340.60 crores were provided to 66,24,955 farmers !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments