பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ. 25 லட்சம் இழப்பீடு: மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்
விருதுநகர் அருகே தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்கிட மார்க்சிஸ்ட் வலியுறுத்தி இருப்பது...
விருதுநகர் அருகே, வச்சக்காரப்பட்டியில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 20-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ள நிலையில், பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்கிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
விருதுநகர் அருகே, வச்சக்காரப்பட்டியில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளதும், பலர் படுகாயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதும் பெரும் வேதனையளிக்கிறது. இந்த ஆலையில், 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்ததால் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.
Advertisement
Advertisement
விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு விபத்துக்கள் நடந்த வண்ணம் உள்ளன. சமீபத்தில், ஏப்ரல் 14 ஆம் தேதி ஆண்டியாபுரம் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் 4 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். பட்டாசு ஆலைகளில் முறையான ஆய்வுகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாததன் விளைவே இதுபோன்ற விபத்துக்களுக்கு முக்கிய காரணமாக உள்ளன.
எனவே, இந்த விபத்து குறித்து முறையான விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும், உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கிட வேண்டுமெனவும், படுகாயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு தரமான சிகிச்சையும், உரிய இழப்பீடும் வழங்கிட வேண்டும்.
மேலும், பட்டாசு ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்திடவும், உரிய பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றாத ஆலைகளின் மீது நடவடிக்கை மேற்கொள்ளவும், இதுபோன்ற விபத்துக்கள் இனிமேல் நிகழாத வண்ணம் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
Rs. 25 Lakh Compensation Each for Families of Those Killed in Firecracker Factory Blast
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.