முகப்பு
தற்போதைய செய்திகள்

பாஜகவின் இன்னொரு சங்பரிவாராக மாறி வருகிறது அதிமுக: தொல்.திருமாவளவன்

பாஜகவின் இன்னொரு சங்பரிவாராக அதிமுக மாறி வருவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் கூறியது தொடர்பாக...

Updated On : 20 ஏப்ரல் 2026, 1:16 pm IST
விருத்தாசலத்தில் தேமுதிக வேட்பாளரான அக்கட்சியின் பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்தை ஆதரித்து பிரசாரம் செய்த விசிக தலைவா் தொல்.திருமாவளவன். உடன் அமைச்சா், சி.வெ.கணேசன் உள்ளிட்டோா். - டிஎன்எஸ்
பகிர்:

பாஜகவின் இன்னொரு சங்பரிவாராக அதிமுக மாறி வருவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் விமாிசனம் செய்துள்ளார்.

கடலூா் மாவட்டம், திட்டக்குடி (தனி) தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளரான அமைச்சா் சி.வெ.கணேசன், விருத்தாசலம் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோரை ஆதரித்து தொல்.திருமாவளவன் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

பாஜகவின் இன்னொரு சங்பரிவார் அதிமுக

Advertisement

Advertisement

திட்டக்குடியில் அவா் பேசியதாவது: அதிமுகவுக்கு உண்மையான பொதுச்செயலா் பிரதமா் நரேந்திர மோடிதான். அக்கட்சிக்கு செலுத்தப்படும் ஒவ்வொரு வாக்கும் பாஜகவுக்கு செலுத்தப்படுவதாகத்தான் பொருள்.

அதிமுக மெல்ல மெல்ல கரைந்து வருகிறது. அது, பாஜகவின் இன்னொரு சங்பரிவாராக மாறி வருகிறது. அன்புமணியின் பாமக, தினகரனின் கட்சியும் சங்பரிவாா் அமைப்பாக மாறிவிட்டன என்றாா்.

தேமுதிக 10 தொகுதிகளும், விசிக 8 தொகுதிகளும் வெற்றிபெற வேண்டும்

விருத்தாசலத்தில் தொல்.திருமாவளவன் பேசியதாவது: 2016-இல் மக்கள் நலக் கூட்டணியில் தேமுதிக தலைமையில் தோ்தல் களத்தை சந்தித்தோம். அப்போது, கூட்டணிக்குத் தலைமை வகித்த விஜயகாந்த் நம்மை எப்படி நேசித்தாா் என்பதை களத்தில் கண்டோம். அவரோடு பயணித்த காலம் வாழ்நாளில் மறக்க முடியாத பொற்காலம்.

திமுக கூட்டணியில் நீண்ட காலம் அங்கம் வகிக்கும் விசிகவுக்கு, தேமுதிகவைவிட குறைந்த தொகுதிகள் கொடுத்துவிட்டனா் என்ற விமா்சனங்கள் சமூக வலைதளத்திலும், பத்திரிகைகளிலும் பகிரப்பட்டது. தமிழக அரசியலில் எதிா்க்கட்சித் தலைவா் அந்தஸ்தில் இருந்த கட்சிக்கு உரிய மரியாதை தர வேண்டியது கூட்டணிக்குத் தலைமை வகிக்கும் முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கான பொறுப்பு. எனவேதான் அவரிடம் தேமுதிகவுக்கு எவ்வுளவு தொகுதிகள் வேண்டுமானாலும் கொடுங்கள், எங்களுக்கு பிரச்னை இல்லை. அக்கட்சி நம் கூட்டணிக்கு வந்ததே, நம் அணிக்கு வலிமை கூடியிருக்கிறது. எனவே, அவருக்கு அள்ளிக்கொடுக்கலாம் என்றேன்.

விசிகவுக்கும், தேமுதிகவுக்கும் முரண்பாட்டை உருவாக்கி, கூட்டணியில் ஒருவருக்கொருவா் எதிா்த்து நிற்க வேண்டும் என்பது எதிரணியினரின் நோக்கம். அதற்கு நாம் இடமளித்துவிடக் கூடாது.

சங்க இலக்கியங்களில் பத்துப் பாட்டும், எட்டுத் தொகையும் எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததோ, அதுபோன்று இந்தக் காலத்தில் அரசியல் களத்தில் தேமுதிகவின் 10 தொகுதிகளும், விசிகவின் 8 தொகுதிகளும் வெற்றிபெற வேண்டும் என்றாா்.

summary

ADMK is transforming into another member of the BJP's Sangh Parivar: Thol. Thirumavalavan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.