முகப்பு
தற்போதைய செய்திகள்

தாரமங்கலம் முன்னாள் எம்.எல்.ஏ பெ.கண்ணையன் காலமானார்: அன்புமணி இரங்கல்

தாரமங்கலம் முன்னாள் எம்.எல்.ஏ பெ.கண்ணையன் மறைவு குறித்து...

Updated On : 27 ஏப்ரல், 2026 at 11:11 AM
Passed away of Former Taramangalam MLA P. Kannaiyan - டிஎன்எஸ்
பகிர்:

தாரமங்கலம் முன்னாள் எம்.எல்.ஏ பெ.கண்ணையன் மறைவுக்கு பாமக தலைவர் அன்புமணி இரங்கல் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் விடுத்துள்ள இரங்கல் அறிக்கையில், சேலம் மாவட்டம் தாரமங்கலம் தொகுதியின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட வன்னியர் சங்கத் தலைவருமான பெ.கண்ணையன் உடல்நலக் குறைவால் ஞாயிற்றுக்கிழமை இரவு காலமானார் என்ற செய்தி அறிந்து பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

வன்னியர் சங்கமும், பாட்டாளி மக்கள் கட்சியும் தொடங்கப்பட்ட நாள் முதலாகவே இரு அமைப்புகளின் வளர்ச்சிக்காகவும் கடுமையாக உழைத்தவர் பெ.கண்ணையன். வன்னியர் இட ஒதுக்கீடு கோரி 1987 -ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு வார தொடர் சாலைமறியல் போராட்டம் உள்பட வன்னியர் சங்கம், பாமக ஆகியவற்றின் சார்பில் நடத்தப்பட்ட அனைத்துப் போராட்டங்களிலும் பங்கேற்றவர். ஏற்றுக் கொண்ட கொள்கைகளுக்காக போராடி பல முறை சிறை சென்றவர். வன்னியர் சங்கத்தின் ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத் தலைவர், பாமக துணைப் பொதுச் செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளை ஏற்று மிகவும் திறம்பட செயலாற்றிய பெருமைக்குரியவர்.

Advertisement

2006 -ஆம் ஆண்டு தாரமங்கலம் சட்டப்பேரவைத் தொகுதியிலிருந்து தமிழக சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கண்ணையன், அந்த தொகுதி மக்களின் கோரிக்கைகளுக்காகவும், தொகுதியின் வளர்ச்சிக்காகவும், சமூகநீதிக்காகவும் அவையில் தொடர்ந்து குரல் கொடுத்தவர்.

ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்ட அவர், சம்பு முனிவர் நடத்திய யாகத்திலிருந்து வீர வன்னிய மகராஜா அவதாரம் எடுத்த பெருநாளான பங்குனி உத்திரத் திருவிழாவை ஒவ்வொரு ஆண்டும் மிகச் சிறப்பாக நடத்தி வந்தவர். என் மீது மாறாத அன்பும், பற்றும் கொண்டு இருந்தவர். அவரை சாமி என்று தான் நான் அன்புடன் அழைப்பேன். எங்கள் குடும்பத்தில் ஒருவராகவே கண்ணையன் இருந்தார். சில மாதங்களுக்கு முன் நான் சேலம் சென்றிருந்த போது என்னை சந்தித்து நலம் விசாரித்துச் சென்றார். பாமகவுக்கும், எனக்கும் நீண்டகாலம் துணையாக இருப்பார் என எதிர்பார்த்திருந்த நிலையில் அவரது மறைவு அதிர்ச்சியையும், வேதனையும் தந்துள்ளது. அவரது இழப்பை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

பெ.கண்ணையனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட பாமக மற்றும் வன்னியர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.