காவிரி விவகாரத்தில் பாஜகவும் காங்கிரஸும் கூட்டுச் சதி: அன்புமணி
மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் பாஜகவும் காங்கிரஸும் கூட்டுச் சதியில் ஈடுபட்டிருப்பதாக அன்புமணி கூறியது குறித்து...
மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் பாஜகவும் காங்கிரஸும் கூட்டுச் சதியில் ஈடுபட்டிருப்பதாக பாமக தலைவர் அன்புமணி குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுடன் அன்புமணி பேசியதாவது, "மேக்கேதாட்டு அணையை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை; அங்கீகரிக்கவில்லை. இவ்வாறு அங்கீகரிக்கப்படாத ஒன்றில் பேச்சுவார்த்தை நடத்துவதில் எந்த அர்த்தமும் கிடையாது. மத்திய அரசிடமும் பிரதமர் மோடியிடமும்தான் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும். மேக்கேதாட்டு அணையைக் கட்ட விடக் கூடாது என மத்திய அரசுக்குத்தான் அழுத்தம் தர வேண்டும்.
கர்நாடக அணையில் இன்றைக்கு 62 டிஎம்சி தண்ணீர் இருக்கிறது. ஆனால், தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்து விடுமாறு காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு, கடந்த மாதத்தில் இரு முறை அறிவுறுத்தியபோதிலும், அவர்களிடம் நீர் இல்லை என்று கூறினர்.
Advertisement
Advertisement
மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கு முன்பாகவே, கர்நாடகத்தில் தண்ணீர் இருந்தும் தமிழகத்துக்குத் தர மறுக்கும்நிலையில், அணை கட்டியபிறகு குடிப்பதற்குக்கூட தண்ணீர் கிடைக்காது.
ஆகையால், தமிழக முதல்வர் விஜய் கர்நாடகத்துக்கு செல்லக் கூடாது. அதற்கு முன்னதாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுங்கள். இது தவெகவின் தனிப்பட்ட பிரச்னை கிடையாது. இது தமிழ்நாட்டின் பிரச்னை. இதனை வேறு விதமாக கர்நாடகம் கொண்டு செல்கிறது. அதில் முதல்வர் விஜய் விழுந்து விடக் கூடாது. இந்த விவகாரத்தில் மத்திய பாஜக அரசும், கர்நாடக காங்கிரஸ் அரசும் கூட்டுச் சதி செய்து வருகின்றனர். இதில் தமிழ்நாடு விழுந்து விடக் கூடாது என்பதுதான் ஒட்டுமொத்த விவசாயிகளின் கோரிக்கை.
கடந்த காலங்களில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதெல்லாம் காவிரி நீருக்காகத்தான்; மேக்கேதாட்டு அணைக்காக அல்ல.
மேக்கேதாட்டு அணை விவகாரம் குறித்து விவாதிக்க பிரதமர் மோடியிடம் எங்களை அழைத்துச் செல்லுங்கள். அவரிடம் வலியுறுத்த நாங்கள் தயாராக உள்ளோம்.
அதேபோல, மேக்கேதாட்டு அணை கட்டக் கூடாது என ராகுல் காந்தியிடம் சொல்ல மாணிக்கம் தாகூருக்கு தைரியம் இருக்கிறதா?
கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணை கட்டக் கூடாது என ராகுல் காந்தி சொன்னால், தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து நான் விலகி விடுகிறேன்" என்று தெரிவித்தார்.
BJP and Congress in collusion over the Cauvery issue, says PMK Leader Anbumani
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.