மீண்டும் வெடித்த பாலியல் புகார்: அண்ணா பல்கலை பேராசிரியர் மீது மாணவி பாலியல் புகார்!
சென்னை அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக காவல் ஆணையர் அலுவலகத்தில் மாணவி ஒருவர் அளித்துள்ள புகார் குறித்து...
சென்னை அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக காவல் ஆணையர் அலுவலகத்தில் மாணவி ஒருவர் புகார் அளித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் நான்காம் ஆண்டு பயிலும் மாணவி ஒருவர், பேராசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக வியாழக்கிழமை மாலை சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
அந்த மனுவில், பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் தனக்கு நேரடியாகவும், செல்போனில் ஆபாசமான குறுஞ்செய்திகளை அனுப்பியும் பாலியல் தொல்லை கொடுத்து வருவதாகவும், தனக்கும் மட்டுமல்லாமல், தனது தோழிகள் சிலருக்கும் பாலியல் தொல்லை கொடுத்து வருவதாகவும், இதனை வெளியில் சொன்னால் தொலைத்துவிடுவேன் என மிரட்டுவதாக குறிப்பிட்டிருந்தார். மேலும் இதுதொடர்பாக பல்கலைக்கழக கமிட்டியிடமும் தான் புகார் தெரிவித்திருப்பதாகவும், இந்த விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.
இதையடுத்து மாணவியின் பாலியல் புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு அபிராமபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து மாணவியின் புகார் மனு மீது காவல் உயரதிகாரிகள் நேரடி பார்வையில் கோட்டூர்புரம் போலீசார் விசாரணையை தொடங்கினர்.
மாணவியிடம் மயிலாப்பூர் காவல் ஆணையர் தலைமையில் மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே, கடந்த 2024 ஆம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவரை, கல்லூரி அருகே துரித உணவக கடை நடத்தி வந்த நபர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டு இப்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அண்ணாமலை கண்டனம்
இதனிடையே, அண்ணா பல்கலைக்கழக மாணவியின் பாலியல் குற்றச்சாட்டு மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. மாணவிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டிய கல்வி நிறுவனங்களிலேயே, தொடர்ந்து இத்தகைய சம்பவங்கள் நடப்பது துரதிருஷ்டவசமானது மற்றும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.