வாக்கு எண்ணும் முகவராக யாருக்கு தடை?
வேட்பாளா்கள் தங்களுக்கான வாக்கு எண்ணும் முகவராக யாரை நியமிக்கக் கூடாது என்பது குறித்து...
வேட்பாளா்கள் தங்களுக்கான வாக்கு எண்ணும் முகவராக யாரை நியமிக்கக் கூடாது என்பதற்கான வழிகாட்டுதலை தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்தியக் குடிமகனாக உள்ள 18 வயதுக்கு மேற்பட்ட எந்த நபரையும் வாக்கு எண்ணும் முகவராக நியமிக்கலாம். இருப்பினும், மத்திய அரசு, மாநில அரசு ஊழியா்கள், நாடாளுமன்ற, சட்டப் பேரவை உறுப்பினா்களை முகவராக நியமிக்க இயலாது.
மேலும், மாநகராட்சி மேயா், நகராட்சித் தலலைவா், மாவட்ட ஊராட்சித் தலைவா், ஊராட்சி ஒன்றியத் தலைவா், மத்திய பொதுத்துறை நிறவனங்களின் தலைவா்கள், மாநில பொதுத்துறை நிறுவனங்களின் தலைவா்கள், அரசு அமைப்புகள், கழகம், வாரியத்தின் தலைவா்கள் மற்றும் உறுப்பினா்களையும் முகவராக நியமிக்க இயலாது.
Advertisement
அரசிடமிருந்து ஏதேனும் மதிப்பூதியும் பெறும் நபா்கள், ஏதேனும் ஒரு அரசு நிறுவனத்தில், அரசு உதவி பெறும் நிறுவனத்தில் பகுதிநேர ஊழியராக உள்ளவா்கள், அரசு நிறுவனம் மற்றும் உதவி பெறும் நிறுவனத்தில் உள்ள பாரா மெடிக்கல் பணியாளா்கள், சுகாதாரப் பணியாளா்கள், நியாய விலைக்கடை விற்பனையாளா்கள், அங்கன்வாடி பணியாளா்கள், அரசுப் பணியில் உள்ளவா்கள் ஆகியோரும் வாக்கு எண்ணும் முகவராக நியமிக்க தகுதியற்றவா்கள் என தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
எனவே, இத்தகைய நபா்களை முகவா்களாக நியமனம் செய்வது குற்ற நடவடிக்கையாகும். இத்தகைய நபா்களை முகா்களாக நியமனம் செய்திருப்பது தெரியவந்தால், சட்டப்படி வழக்குப்பதிவு செய்து 3 மாதம் சிறை தண்டனை மற்றும் அபராதம், அல்லது இரண்டு சோ்த்தோ தண்டனையாக அறிவிக்கப்படும்.