செகந்திராபாத்தில் ரயில் பயணியிடமிருந்து ரூ. 1.22 கோடி ஹவாலா பணம் பறிமுதல்!
மும்பையில் இருந்து ஹைதராபாத்திற்கு ரயிலில் கடத்தி வந்த ரூ.1.22 கோடி ஹவாலாபணம் பறிமுதல் குறித்து...
தெலங்கானா: மும்பையில் இருந்து தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்திற்கு ரயிலில் கடத்தி வந்த ரூ. 1.22 கோடி ஹவாலாபணத்தை ரயில்வே பாதுகாப்புப் படையினா் பறிமுதல் செய்தனா்.
மும்பையிலிருந்து ஹைதராபாத்திற்கு 'தேவகிரி எக்ஸ்பிரஸ்' ரயில் மூலம் ரூ. 1.22 கோடி மதிப்பிலான ஹவாலா பணம் கடத்தப்படுவதாக ரயில்வே போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து ரயில்வே காவல் அதிகாரிகள் அளித்த தகவலின்படி, மே 26-ஆம் தேதி, தேவகிரி எக்ஸ்பிரஸ் ரயிலில் செகந்திராபாத் ரயில்வே காவல்துறையினரும், ரயில்வே பாதுகாப்புப் படையினா் இணைந்து நடத்திய சோதனையின் போது, சந்தேகத்திற்குரிய வகையில் ஒரு பயணப் பையை எடுத்து வந்த நபரை, பிற்பகல் சுமார் 3 மணியளவில் பொல்லாரம் மற்றும் மல்காஜ்கிரி ரயில் நிலையங்களுக்கு இடையில் வைத்து பிடித்தனர்.
Advertisement
Advertisement
இதையடுத்து பிடிபட்ட நபரை விசாரித்தபோது, அந்த நபர், மகாராஷ்டிரம் மாநிலம் அமராவதி மாவட்டத்தில் உள்ள சாய் நகர், பிருந்தாவன் காலனியைச் சேர்ந்த விஜய் அம்பதாஸ் குப்தா (40) என்பதும், தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்துக்கு ஹவாலா பணம் எடுத்து வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து பணத்தைப் பறிமுதல் செய்த ரயில்வே போலீஸார், விஜய் அம்பதாஸ் குப்தாவை கைது செய்து அவரிடம் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டதில், மும்பையில் 'காந்தா ஜூவல்லரி' என்ற நகைக் கடையை நடத்தி வரும் 'சந்தோஷ் சேத்' என்பவரிடமிருந்து, மே 25 ஆம் தேதி ரூ. உரிய ஆவணங்களின்றி 1,22,70,000 பெற்றதாகவும், அவரது அறிவுறுத்தலின் பேரில், செகந்திராபாத், மோண்டா மார்க்கெட்டில் நகைக் கடை நடத்தி வரும் 'பண்டி' என்பவரிடம் ஒப்படைப்பதற்காக தேவகிரி எக்ஸ்பிரஸ் மூலம் செகந்திராபாத்திற்கு வந்ததாகக் கூறினார். இந்த ஹவாலா பணத்தை பண்டிடம் ஒப்படைப்பதற்காக அவருக்கு ரூ. 5,000 வழங்குவதாக என தெரிவித்திருந்தது தெரியவந்தது.
உரிய ஆவணங்களின்றி பறிமுதல் செய்யப்பட்ட அந்தப் பணம், நகைத் தொழில் சார்ந்த 'ஹவாலா' பணப் பரிமாற்றத்துடன் தொடர்புடையது எனத் தெரியவந்தது. இருப்பினும், அந்த பணத்தை எதற்காகப் பயன்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது என்பது குறித்தோ, எந்தவிதமான உரிய ஆவணங்களையோ அல்லது நம்பகமான விளக்கத்தையோ அவர் தெரிவிக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட நபரின் ஒப்புதல் வாக்குமூலம் இரண்டு சாட்சிகள் முன்னிலையில் பதிவு செய்யப்பட்டது. மேலும் அவரிடமிருந்த செல்போன், அடையாளச் சான்றுகள் மற்றும் ரயில் பயணச் சீட்டு ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. கைப்பற்றப்பட்ட பணத்தில், ரூ. 500 X 24000 = ரூ. 1.20 கோடி, ரூ. 200 X300 = ரூ. 60,000 மற்றும் ரூ.100 X 2100 = ரூ. 2.10 லட்சம் ஆகியவை இருந்தன. இதன் மூலம் கைப்பற்றப்பட்ட மொத்தத் தொகை ரூ. 1 கோடியே 22 லட்சத்து 70 ஆயிரம் இருந்தது.
இதையடுத்து அவரைக் கைது செய்த ரயில்வே காவலர்கள் பறிமுதல் பணத்தை வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா். இதுகுறித்து வருமான வரித் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
இந்த ஹவாலா பணத்தைக் கைப்பற்றியதற்காக செகந்திராபாத் ரயில் நிலைய ரயில்வே காவல்துறையினர் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படையினருக்கு காவல் துறை உயரதிகாரி பாராட்டு தெரிவித்துள்ளார்.