மே 31-க்குள் 'உடன்பிறப்பின் குரல் இணையதளத்தில்' கருத்துகளை பதிவிடுக: மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!
மே 31-க்குள் உடன்பிறப்பின் குரல்' இணையதளத்தில் கருத்துகளை பதிவிடுமாறு மு.க. ஸ்டாலின் கூறியிருப்பது தொடர்பாக...
மே மாதம் 31-ஆம் தேதிக்குள் உங்கள் கருத்துகளை 'உடன்பிறப்பின் குரல்' இணையதளத்தில் இணையத்தளத்தில் பதிவிடுக என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.
நடந்து முடிந்த 2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவின் தோல்விக்கான காரணம் என்ன? இனி நாங்கள், நாம் என்ன செய்ய வேண்டும்? என்பதற்கான தங்களது பதில்களையும், கருத்துகளையும் என்னிடம் கூறுங்கள் என்று பொதுமக்களுக்கும் திமுகவினருக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார்.
இதற்காக, 'உடன்பிறப்பின் குரல்' http://udanpirapinkural.in என்ற சிறப்பு இணையதளம் தொடங்கப்பட்டு, அதில் தங்களது கருத்தை பதிவிடுமாறு தெரிவிக்கப்பட்டது. அதில் இதுவரை 4 லட்சத்திற்கும் அதிகமானோர் தங்கள் கருத்தை பதிவிட்டுள்ளனர்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், மே 31-க்குள் பொதுமக்கள், திமுகவினர் அனைவரும் தங்களது கருத்துகளை பதிவிடுமாறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில்,
அன்பு உடன்பிறப்புகளே, http://udanpirapinkural.in இணையத்தளத்தில் இதுவரை 4.60 லட்சம் கருத்துகளைப் பெற்றுள்ளோம். இந்த இணையத்தளத்தின் முக்கிய நோக்கமே உடன்பிறப்புகள் அனைவரும் எந்தவிதத் தயக்கமுமின்றி உங்கள் மனதில் தோன்றும் கருத்துகளைப் பதிவு செய்ய வேண்டும் என்பதுதான். உங்கள் கருத்துகள் நேரடியாக எனக்கே வந்து சேரும்.
இந்த இணையத்தளத்தில் உடன்பிறப்புகள் மட்டுமல்லாமல், கழக நிர்வாகிகள், கழக அனுதாபிகள், பொதுமக்கள் என அனைவரும் அளிக்கும் ஆலோசனைகளை ஆராய்ந்து நம் அடுத்தகட்ட நடவடிக்கைகளை நான் திட்டமிடுவேன்.
எனவே மே மாதம் 31-ஆம் தேதிக்குள் உங்கள் கருத்துகளை மேற்கண்ட இணையத்தளத்தில் பதிவு செய்யவும்.
திமுக மாநிலப் பொறுப்பாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மற்ற முக்கியப் பொறுப்பாளர்கள் அனைவரும் மறக்காமல், இந்தச் செய்தி அனைத்து உடன்பிறப்புகளுக்கும் சென்றடையும் வண்ணம் உங்களுடைய சமூக வலைத்தளப் பக்கங்களிலும் வாட்ஸ்ஆப் குழுக்களிலும் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.