வாடகைத் தாய் (ஒழுங்குமுறை) மசோதா, 2019! இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்!!
வாடகைத் தாய் முறையை ஒழுங்குபடுத்தும் மசோதா பற்றிய விவரங்கள்..
வாடகைத்தாய் ஒழுங்குப்படுத்தும் சட்ட மசோதாவில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்ன தெரியுமா?
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தம்பதிகளுக்கு இந்தியா வாடகைத் தாய்களின் இருப்பிடமாக உருவாகி இருப்பதுடன், பண்புநெறியற்ற நடைமுறைகள், வாடகைத் தாய்கள் ஏமாற்றப்படுதல், வாடகைத் தாய்கள் மூலம் குழந்தைகளை கைவிடுதல் மற்றும் மனித கருவின் ஆரம்ப நிலை மற்றும் கருப்பைகள் ஆகியவற்றை ஏற்றுமதி செய்யும் இடைத்தரகர்களின் மோசடிகள் போன்று பல சம்பவங்கள் நடைபெறுவதாக கூறப்படுகின்றன.
கடந்த சில வருடங்களாக, பல்வேறு அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களில் இந்தியாவில் உள்ள வணிகரீதியான வாடகைத் தாய் அமர்த்துவது குறித்து பரவலாக கண்டனம் தெரிவிக்கப்படுவதோடு, வணிகரீதியான வாடகைத் தாய் தடை செய்யப்பட வேண்டும் என்றும் பண்புநெறி சார்ந்த பொதுநல வாடகைத் தாய் அமர்த்துவதை அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் முக்கியத்துவம் அளித்து தெரிவித்து வருகின்றன. இந்திய சட்ட ஆணையத்தின் 228வது அறிக்கையிலும், வணிகரீதியான வாடகைத் தாய் தடை செய்யப்பட வேண்டும் என்றும் தேவைப்படும் இந்திய தம்பதிகளுக்கு பண்புநெறி சார்ந்த பொதுநல வாடகைத் தாய் அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.
Advertisement
Advertisement
இந்த மசோதா, தேசிய அளவில் தேசிய வாடகைத் தாய் வாரியம் மற்றும் மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்கள் அளவில், மாநில வாடகைத் தாய் வாரியங்கள் மற்றும் தக்க அமைப்புகளை ஏற்படுத்தி, இந்தியாவில் வாடகைத் தாய் பயன்படுத்துவதை ஒழுங்குப்படுத்தும்.
இதன் மூலம் பண்புநெறி சார்ந்த வாடகைத்தாய் அமர்த்த விரும்பும் திருமணமாகி குழந்தையற்ற அனைத்து தம்பதிகளும் பயனடைவார்கள். மேலும், வாடகைத் தாய்கள் மற்றும் அதன் மூலம் பிறந்த குழந்தைகளின் உரிமைகள் பாதுகாக்கப்படும்.
நாடாளுமன்ற மக்களவையில் வாடகைத்தாய் முறையை ஒழுங்குப்படுத்துவது தொடர்பான மசோதா நிறைவேறியது. இந்நிலையில் வாடகைத்தாய் ஒழுங்குப்படுத்தும் சட்ட மசோதாவில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்ன என்று தற்போது பார்ப்போம்.....
வாடகைத்தாய் முறை மூலம் குழந்தை பெற நினைப்பவர்கள் இந்திய தம்பதிகளாக இருக்க வேண்டும்
தம்பதியரில் ஒருவருக்கு குழந்தை பெற தகுதி இல்லாமல் இருக்க வேண்டும்.
வாடகைத்தாய் முறையை பயன்படுத்திக்கொள்ளும் பெண்ணுக்கு 23 முதல் 50 வயதுக்குள் இருக்க வேண்டும்.
திருமணமாகி குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் நிறைவடைந்திருக்க வேண்டும்
குழந்தைப்பேறுக்கு வாய்ப்பில்லாதவராக தம்பதியரில் ஒருவர் இருக்க வேண்டும்
நெருங்கிய சொந்தத்தில் இருக்கும் ஒருவரையே வாடகைத் தாயாக தேர்ந்தெடுக்கலாம்.
வாடகைத்தாயாக இருப்பவர் அந்த தம்பதிக்கு நெருக்கமான உறவினராக இருக்க வேண்டும். அவரும் திருமணமாகி குழந்தை பெற்றிருக்க வேண்டும்.
மருத்துவ செலவை தவிர வேறு எந்த வகையிலும் பணம் வழங்கப்படாது
வியாபார ரீதியில் பணம் கொடுத்து வாடகைத்தாயாக அமர்த்தக்கூடாது. ஆனால், மருத்துவ செலவு, காப்பீட்டு செலவு போன்றவற்றை அவருக்குக் கொடுக்கலாம்.
வாடகை தாய்க்கும், சம்பந்தப்பட்ட தம்பதிக்கும் தகுதி சான்றிதழ்கள் வழங்கப்படும்.
வாடகைத்தாயாக இருப்பவருக்கு 25-35 வயதுடையவராக இருக்க வேண்டும்.
இந்த முறையை ஒழுங்குபடுத்துவதற்கு மத்திய மற்றும் மாநில அளவில் வாடகைத் தாய் வாரியம் அமைக்கப்படும்.
வாடகைத் தாய் மூலம் பெறப்பட்ட குழந்தைகளை, தம்பதிகள் எக்காரணத்தை கொண்டும் கைவிட்டுவிடக் கூடாது என்று அந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது.
ஒரு பெண், ஒரே ஒரு முறை மட்டுமே வாடகைத் தாயாக இருக்க வேண்டும்.