சமையலறையை நறுமணத்தோடு வைக்க சில யோசனைகள்!
சமையலறையை நறுமணத்தோடு வைத்திருக்க வேண்டும் என்றால் சில யோசனைகள்
சமையலறையில் எப்போதும் உணவுப் பதார்த்தங்களின் வாசனைகள் இருக்கும். சில வேளைகளில் ஏதாவது மிச்சம் மீதியான உணவுப் பொருள்களை விட்டுவிட்டால் நாற்றமடிக்கும். அதனைத் தவிர்த்து நறுமணத்தோடு வைத்திருக்க சில யோசனைகள்.
குப்பைக் கூடையில் இருந்து கிளம்பும் நாற்றத்தைத் தடுக்க ஒரு சிறிய கிண்ணத்தில் பேக்கிங் சோடாவைக் கொட்டி, கூடைக்குப் பக்கத்திலேயே வைத்தால் எந்த நாற்றமும் வராது.
மூன்று மாதங்களுக்கு ஒரு முறை பேக்கிங் சோடாவை மாற்றிக் கொள்ளலாம்.
அடுப்பில் ஏதேனும் உணவுப்பொருள் தீய்ந்துவிட்டால், ஜன்னல்களை திறந்து வெளியே காற்று செல்ல வழி செய்துவிட்டு, குறைந்த நறுமணம் கொண்ட ஒரு ஊதுபத்தியை ஏற்றி வைக்கலாம்.
கண்ணாடி பாட்டிலில் இருந்து வீசும் துர்நாற்றம் போக்க, பாட்டிலில் பாதி அளவு தண்ணீர் ஊற்றி அதில் ஒரு சிட்டிகை அளவு கடுகு அல்லது சோடா உப்பு போட்டுக் குலுக்கி ஊற வைத்துக் கழுவினால் வாடை அகன்றுவிடும்.
உப்பு ஜாடியில் சிறிதளவு சோள மாவைப் போட்டுவைத்தால், உப்பு நீர்த்துப்போகாமல் இருக்கும்.
ஃபிரிட்ஜில் மீதமான உணவுகளை வைத்துவிட்டு எடுக்காமல் விட்டுவிட்டால் நாற்றமடிக்கலாம். எனவே, மீதமான பொருள்களை வைத்தால் மறக்காமல் எடுத்துவிடவும். நாற்றமடித்தால் ஒரு எலுமிச்சையை வெட்டி சிறிது நேரம் உள்ளே வைத்திருக்கலாம்.
சமைக்கும் பொருளின் அமிலத்தன்மை, பயன்படுத்தும் தண்ணீர், தரம் குறைந்த அலுமினிய பாத்திரம் போன்றவற்றால் குக்கரின் உட்புறம் எளிதில் நிறம் மாறி விடும். எனவே சமைத்த பிறகு குக்கரில் தண்ணீர் ஊற்றி சிறிதளவு புளி அல்லது நறுக்கிய எலுமிச்சைத் துண்டு ஒன்றைப் போட்டு குக்கரை கழுவி வந்தால் மீண்டும் பழைய பளபளப்பை அடையும்.
- ஏ.எஸ்.கோவிந்தராஜன்