வீடுகளில் சமையல் செய்ய பலரும் அவர்களது விருப்பப்படி இரும்பு, வெண்கலம், ஈயம், அலுமினியம், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் / எவர்சில்வர், நான்ஸ்டிக் பாத்திரங்கள், மண் பானைகள் என பலவகையான பாத்திரங்களைப் பயன்படுத்துகிறோம்.
சிலர் ஒவ்வொரு வகையான உணவுக்கும் என்று பிரத்யேகமான பாத்திரங்களைப் பயன்படுத்துவார்கள். சிலர் மருத்துவக் குணங்களை அறிந்து பயன்படுத்துவார்கள். சிலருக்கு பாத்திரங்களைப் பற்றிய புரிதல் இல்லாமலும் இருக்கலாம்.
அதாவது மண் பானை என்று சொன்னதும் பலரும் இந்த பக்கத்தை மூடிவிடும் வாய்ப்பு உள்ளது. ஆனால், பண் பானையில் செய்தால்தான் சத்து என்றெல்லாம் சொல்லப்போவதில்லை. அதாவது,
மண் பானையில் சமைப்பதால், மிகுந்த ருசியோடும், உடல் ஆரோக்கியத்துக்கு ஏற்றதாகவும் இருக்கும். மண் பானையில் கால்சியம் மெக்னீசியம் போன்ற தாது பொருள்கள் நிறைந்துள்ளன. இப்போது மக்கள் இருக்கும் வேகத்துக்கு மண் பானையெல்லாம் செட் ஆகாது. ஆனால் அதில் இருக்கும் சத்து கிடைக்க வேண்டும் என்று நினைத்தால் சின்ன மண் குடுவை, சின்ன மண் கிண்ணம் வாங்கி வைத்து, சமையல் செய்த பிறகு மீதமாகும் குழம்பை அதில் ஊற்றி வைத்துக் கொள்ளலாம்.
மீதமாகும் சாப்பாட்டை மண் குடுவையில் போட்டு தண்ணீர் ஊற்றி வைத்துக் கொள்ளலாம். இதெல்லாம் பெரிய சிரமம் இல்லாத விஷயங்கள் என்பதால் எளிதாக உடலுக்கு நன்மை கிடைக்கும். முடிந்தவர்கள் முயற்சிக்கலாம்.
நான்ஸ்டிக் பாத்திரங்கள்
எண்ணெய் விடாமல் உணவுகளை செய்யலாம், தோசை சுடலாம் என்று விளம்பரப்படுத்தப்பட்ட நான்ஸ்டிக் பாத்திரங்கள் தற்போது புற்றுநோயை உருவாக்குகின்றன என்று வெளியாகி வருகிறது. சரி வீட்டில் அதுதான் இருக்கிறது,என்றால் நான்ஸ்டிக் பாத்திரங்களில் கீரல்கள் விழாமல், கோட்டிங் போகாமல் இருக்கும் வரை பயன்படுத்துவது நல்லது. கீறல் விழுந்துவிட்டால் அது மெல்ல உணவில் கலக்கும் அபாயம் உள்ளது.
ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் அல்லது எவர்சில்வர்
எவர்சில்வர் பாத்திரங்களை வாங்கும்பொழுது அது உணவு சமைப்பதற்கான தரக்குறியீடு பெற்றதா என்பதை மட்டும் சரிபார்த்து வாங்க வேண்டும்.
பொதுவாக எவர்சில்வர் பாத்திரங்கள் உணவுப் பொருள்களில் ஆக்ஸிஜனேற்றத்தைத் தடுக்கிறது, அவ்வளவு எளிதாக உணவில் கரைவதில்லை. சுத்தப்படுத்த எளிமையாக இருக்கிறது. பெரும்பாலான சமையல்களுக்கு இந்த பாத்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
அலுமினியம்
அலுமினிய பாத்திரங்களில் சமையல் செய்து, உணவு மூலம் அலுமினியம் நம் உடலில் சேர்வதால், தோல் நோய், சிறுநீரகக் கோளாறு ஏற்படும் அபாயம் உள்ளது. ஆனால் அலுமினியத்தில் சமைத்த உடனேயே வேறொரு பாத்திரத்துக்கு உணவை மாற்றிவிட்டால் அபாயத்தைத் தவிர்க்கலாம். சில வீடுகளில் அனைத்து சமையலுக்கும் அலுமினிய பாத்திரங்கள் பயன்படுத்துவர். காரணம் பயன்படுத்த எளிமையாக இருக்கும், வழுக்காது, விரைவாக அடிப்பிடிக்காது என்பதாக இருக்கலாம். ஆனால், அதனை மாற்றிக் கொள்வது நல்லது.
ஈயம்
ஈய பாத்திரத்தில் ரசம் வைத்து சாப்பிடுவது அலாதி சுவைதான். தற்போது உள்ள ஈய பாத்திரங்களை உண்மையான ஈயம் பூசியதா அல்லது கலப்படமா என்பதை பார்த்துதான் வாங்க வேண்டும்.
வெண்கலம்
வெண்கலப் பாத்திரத்தில் சமைத்து சாப்பிடுவதால் சோர்வு நீக்கி புத்துணர்ச்சியை உண்டாகும். ஆனால், வெண்கல பாத்திரங்களை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும். பச்சை நிறமாக மாறாமல் சுத்தம் செய்ய வேண்டும். பச்சை நிறம்படிந்த பாத்திரத்தில் சமைத்தால் சாப்பாடு விஷமாகிவிடும். அதனை தவிர்க்க, வெண்கலப் பாத்திரத்தில் சமைத்தவுடன் அதனை நன்கு கழுவி வெயிலில் காய வைத்து அதன் பிறகே மீண்டும் உபயோகிக்க வேண்டும்.
இரும்பு
இரும்புப் பாத்திரத்தில் சமைப்பதால் ஒரே இடத்தில் சூடு பிடிக்காமல் எல்லா இடங்களிலும் சமமாக சூடு பரவும் என்பதால்தான் பெரிய பெரிய கடைகளில் சமையலுக்கு இரும்புப் பாத்திரங்களைப் பயன்படுத்துகிறார்கள். அது மட்டுமல்லாமல் அதிக நேரம் சாப்பாடு சூடாகவும் இருக்கும். அதிலுள்ள இரும்புச் சத்து சாப்பாட்டில் சேருவதால், உடலில் இரும்புச் சத்து சேர்ந்து ரத்தச் சோகை நோய் வராமல் தடுக்கும் என்கிறார்கள்.
ஆனால், இரும்புப் பாத்திரத்தில் வாழைக்காய், துவர்ப்புக் காய்கறிகளை சமைக்கவே கூடாது. அதிலும் துரு பிடித்த இரும்புப் பாத்திரத்தில் சமைப்பது மிகவும் ஆபத்தானது என்று கூறுகிறார்கள்.
இதையும் படிக்க..
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.