தீபாவளி ரெசிபி! ரிப்பன் பக்கோடா (ரிப்பன் முறுக்கு)
வாய் அகண்ட பாத்திரத்தில் அரிசிமாவு, கடலை மாவு, உப்பு, மிளகாய் தூள் மற்றும் பெருங்காயப் பொடி
தேவையான பொருட்கள்:
- அரிசி மாவு – 2 கப்
- கடலை மாவு – 1 கப்
- மிளகாய் தூள் (காரப் பொடி) -3 தேக்கரண்டி
- உப்பு – தேவைக்கேற்ப
- பெருங்காயத் தூள் – 2 சிட்டிகை
- எள் – ½ தேக்கரண்டி
- உருக்கிய வெண்ணெய் – 3 தேக்கரண்டி
- சூடான எண்ணேய் – 2 தேக்கரண்டி
- கடலை எண்ணெய் (அ) ரிஃபைண்ட் எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு
- முறுக்கு அச்சு
செய்முறை:
- வாய் அகண்ட பாத்திரத்தில் அரிசி மாவு, கடலை மாவு, உப்பு, மிளகாய் தூள் மற்றும் பெருங்காயப் பொடி அனைத்தையும் போட்டு நன்றாக கலக்கவும்.
- பின் உருக்கிய வெண்ணெய் மற்றும் சூடான எண்ணெயை பரவலாக விட்டு பிசிறவும்.
- தேவையான தண்ணீர் சேர்த்து பிசைந்து வைக்கவும். நீரை மொத்தமாக விடாமல் தேவைக்கு ஏற்ப அவ்வப்போது சிறிது சிறிதாக சேர்த்து மாவை பிசையவும்.
- மிருதுவான பதத்தில் மாவை பிசைந்து வைக்கவும்.
- மாவை சிறு நீள் வட்ட உருண்டைகளாக செய்து முறுக்கு அச்சில் நிரப்பவும்.
- எண்ணெயை கடாயில் நன்கு சுடும் வரை காய வைக்கவும்.
- எண்ணெய் நன்றாக சுட்டதும் மாவில் இருந்து சிறு அளவைக் கிள்ளி எடுத்து போட்டுப் பார்க்கவும். மாவு சட்டென்று மேலே வந்து வேக ஆரம்பித்தால் எண்ணெய் சரியான சூட்டில் உள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.
- பின் அச்சிலிருக்கும் மாவை எண்ணெயில் வட்ட வடிவில் பிழியவும்.
- சத்தம் அடங்கியதும் அடுத்த பக்கம் திருப்பிப் போடவும். மிகவும் சிவக்காமல் பக்குவம் பார்த்து முறுக்கை பொரித்து எடுக்கவும்.
குறிப்புகள்:
- கடலை மாவும் அரிசி மாவும் தரமானதாக இருத்தல் அவசியம்.
- தரமற்ற மாவினால் செய்யபடும் முறுக்கு உடைந்தும், சிவந்தும் ருசியில் குறைந்தும் இருக்கும்.
- வெண்ணெய் மற்றும் சூடான எண்ணெய் கலப்பது, முறுக்கை மிருந்துவாகவும் கரகரப்பாகவும் வாயில் போட்டவுடன் கரையும் ருசியுடன் இருக்க உதவும்.
- எண்ணெயை நல்ல சூடான நிலையிலேயே வைத்திருந்து பக்கோடாக்களை பிழியவும். மிக மிதமான சூட்டிலோ அ மிதமான சூட்டிலோ அடுப்பை வைத்திருந்தால் முறுக்கு அதிக எண்ணெயை இழுத்துக் கொள்ளும்.
- அதிக அளவு செய்வதாய் இருந்தால், மொத்த மாவையும் ஒரேடியாக பிசைந்து வைக்காமல், பகுதிகளாக பிரித்துக் கொண்டு செய்யவும். பிசைந்த மாவை அதிக நேரம் வைத்திருந்தால் முறுக்குகள் சிவந்தும் சுவை குறைவாகவும் மாறிவிடும்.