சிறுநீரக பாதிப்புக்கு முகப்பொலிவு க்ரீம் காரணமா?
பயோ டெக்னாலஜி படித்து வரும் 20 வயது இளம்பெண், தனது முகப்பொலிவுக்காகப் பயன்படுத்திய க்ரீம். அவரது உயிருக்கே உலை வைத்திருக்கிறது என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியிருக்கிறது.
மும்பை: பயோ டெக்னாலஜி படித்து வரும் 20 வயது இளம்பெண், தனது முகப்பொலிவுக்காகப் பயன்படுத்திய க்ரீம் அவரது உயிருக்கே உலை வைத்திருக்கிறது என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியிருக்கிறது.
அகோலாவில் உள்ள அழகுக்கலை நிபுணர் பரிந்துரைத்த உள்ளூர் முகப்பொலிவு க்ரீமை பயன்படுத்திய உமாவுக்கு தோழிகளிடையே பாராட்டு மழை குவிந்துள்ளது. தங்கம் போல ஜொலிக்கிறாயே என அவர்கள் சொல்ல.. நாளடைவில், அந்தக் கிரீமையே உமாவின் சகோதரியும், தாயும் பயன்படுத்தியுள்ளனர்.
மூன்று பேரும் தகதகவென ஜொலிக்க, அவர்களது மகிழ்ச்சிக்கு எல்லையில்லாமல் போனது. ஆனால், அந்த மகிழ்ச்சியே விரைவில் தொல்லையாகப் போகிறது என்று அவர்களுக்குத் தெரியாமல் போய்விட்டது.
Advertisement
அந்த க்ரீமை பயன்படுத்திய நான்கு மாதங்களில், மூன்று பேருக்கும் சிறுநீரகத்தில் பிரச்னை ஏற்பட்டது. சிறுநீரகத்தில் உள்ள மிக மெல்லிய வடிப்பான்கள் சேதமடைந்தது கண்டுபிடிக்கப்பட்டது. காரணத்தை ஆராய்ந்த மருத்துவர்களுக்கும் நோயாளிகளுக்கும் காத்திருந்தது அதிர்ச்சி. அவர்கள் பயன்படுத்திய முகப்பொலிவு க்ரீம்தான் இதற்குக் காரணம் என்று தெரிய வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அவர்கள் பயன்படுத்திய இந்த க்ரீம் உள்பட பல பொருள்களை ஆய்வு செய்த போது, கேஇஎம்-ன் ஆயுர்வேத பரிசோதனைக் கூடத்தில் இருந்து வந்த அறிக்கை மருத்துவர்களுக்கே அதிர்ச்சியை அளித்திருக்கக் கூடும்.
இதையும் படிக்க.. பாடகி வாணி ஜெயராம் காலமானார்!
அந்த சரும க்ரீமில் அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் அதிகமான மெர்குரி சேர்க்கப்பட்டிருந்ததும், வழக்கமாக ரத்தத்தில் இருக்க வேண்டிய மெர்குரி அளவு 7க்கும் குறைவு என்ற நிலையில், உமாவின் ரத்தத்தில், அது 46 என்ற அளவில் இருந்தது.
மனித உடலில் இருந்து வெளியேறும் மிகக் கனமான உலோகக் கழிவாக மெர்குரி உள்ளது. இதனை வெளியேற்றும் மிகக் கடினமான பணியை செய்து செய்து சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உமா மற்றும் அவரது தாய், சகோதரி மூவரும் இதற்காக சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
முகப்பொலிவுக்கான க்ரீம்களில் உலோகப் பயன்பாடு இருப்பது இது ஒன்றும் புதிதல்ல என்றும், ஏற்கனவே பல க்ரீம்கள் இந்த சோதனையில் தோல்வி அடைந்திருப்பதாகவும் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.