இஸ்ரோ விஞ்ஞானியாவது ஒன்றே லட்சியம்! மும்பை குடிசைப் பகுதியிலிருந்து கிளர்ந்தெழுந்த ராக்கெட் விஞ்ஞானி!
தாராவில் ஒரு சாதாரண தொடக்கப்பள்ளி ஆசிரியரின் மகனாகப் பிறந்த பிரதமேஷ் வளர்ந்தது, இரவு, பகலாகக் கஷ்டப்பட்டு படித்தது எல்லாம் 10/10 அளவிலான தங்களது சிறு குடிசையில் தான்
மும்பை குடிசைப் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இஸ்ரோவில் விஞ்ஞானியாகப் பணியாற்றத் தேர்வாகியிருக்கிறார். (Indian Space Research Organization). மும்பை குடிசைப்பகுதியில் இருந்து தேர்வாகும் முதல் விஞ்ஞானி இந்த 25 வயது இளைஞர் தான் என்பதால் அப்பகுதி மக்களிடையே சந்தோசத்திற்குக் குறைவில்லை. 10 வருடக் கனவு நனவானதில் இளைஞர் பிரதமேஷ் கிர்வும் கூட செம ஹேப்பி. 10 கடின உழைப்பு தான் தன்னை இந்த இடத்திற்கு கொண்டு வந்து நிறுத்தியுள்ளதாக தெரிவிக்கிறார் அவர்.
மும்பை குடிசைப்பகுதிகளில் ஒன்றான சதாராவில் ஒரு சாதாரண தொடக்கப்பள்ளி ஆசிரியரின் மகனாகப் பிறந்த பிரதமேஷ் வளர்ந்தது, இரவு, பகலாகக் கஷ்டப்பட்டு படித்தது எல்லாம் 10/10 அளவிலான தங்களது சிறு குடிசையில் தான். அம்மா இல்லத்தரசி. அப்பாவுக்கு மட்டுமே சம்பாதனை என்ற நிலை. இளமையில் வறுமை என்பதே கொடுமை, அதிலும் லட்சிய வேட்கையுடன் வளரும் சிறுவனுக்கு அது இன்னும் கொடுமையாக இருந்திருக்கக் கூடும். ஆயினும் பிரதமேஷ் தனது விருப்பம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு விடாது முயற்சி செய்து படித்து இன்று இந்நிலையை எட்டியுள்ளார் என்பது மிகவும் பாராட்டத்தக்கது.
இஸ்ரோவில் விஞ்ஞானியாகும் கனவை நனவாக்கிக் கொள்வது ஒன்று மட்டுமே இன்று வரை பிரதமேஷின் வாழ்க்கைக் குறிக்கோளாக இருந்திருக்கிறது.
10 ஆம் வகுப்பு வரை மராத்தி மீடியம் பள்ளியில் படித்திருக்கிறார் பிரதமேஷ். 10 முடித்ததும் டிப்ளமோ கோர்ஸ் சேர்ந்த புதிதில் முதல் இரண்டு வருடங்களுக்கு ஆங்கில வழியிலான பாடங்களைப் புரிந்து கொள்ள படாதபாடு பட்டிருக்கிறார். காம்ப்ளக்ஸ் எஞ்ஞினியரிங் குறுத்த பாடங்களை ஆங்கிலத்தில் புரிந்து கொள்ள மிகக் கடினமாக இருந்ததாகத் தெரிவிக்கிறார். ஒவ்வொரு நாளும் ஆங்கில மீடியப் பாடங்கள் புரியாமல் வகுப்பறையில் கடைசி பெஞ்சில் சென்று அமர்ந்து கொள்வதால், ஆசிரியர் தன்னை கேள்வி கேட்க வாய்ப்பில்லை என்று நம்பியிருக்கிறார். ஒரு வருடம் இப்படியே கழிய... மறுவருடமும் நாட்கள் இப்படியே சென்றால் தன்னுடைய இஸ்ரோ கனவை எப்படி நனவாக்க முடியும் என்ற பயம் மனதை வாட்டியதால். வகுப்பாசிரியரிடம் சென்று தனது மொழித்திணறலைப் பற்றி பேசி விடுவது என்று முடிவெடுத்துச் சென்று அவரிடம் மனம் திறந்து பேசியதில். ஆசிரியர், பிரதமேஷை தினந்தோறும் எவ்வளவு முடியுமோ, அத்தனை முறை டிக்ஸ்னரி பயன்படுத்திப் படிக்கச் சொல்லியிருக்கிறார். படிப்பை முடித்து இண்டர்ன்ஷிப் என்று சொல்லப்படக்க்கூடிய பயிற்சி வேலைகளுக்காக L&T மற்றும் TATA நிறுவனங்களில் பயிற்சி எடுத்துக் கொள்ள வாய்ப்புக் கிடைக்கவே அங்கிருந்தவர்கள் தனக்கு மேற்கொண்டு வழிகாட்டி உதவினார்கள். அவர்களது வழிகாட்டுதலின் படி, நவி மும்பையில் இருக்கும், ஸ்ரீமதி இந்திரா காந்தி காலேஜ் ஆஃப் இஞ்ஞினியரிங்கில் தனது பொறியியல் பட்டப்படிப்பை முடித்தார் பிரதமேஷ்.
2014 ல் பொறியியல் பட்டப்படிப்பை முடித்ததும் பிரதமேஷ் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் என்று சொல்லப்படக் கூடிய குடிமைப்பணித் தேர்வுகளுக்கு விண்ணப்பித்து தேர்வு எழுதியிருக்கிறார். ஆனால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.
அதையடுத்து கடந்த ஆண்டு இஸ்ரோ தேர்வுகளை எழுதி முடித்தார் பிரதமேஷ். அந்தத்தேர்வுக்கான முடிவுகள் வெளிவந்த போது பிரதமேஷ் மட்டும் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். ஆனாலும் மனம் தளராத பிரதமேஷ் தனியார் நிறுவனமொன்றில் பொறியாளராகப் பணியாற்றத் தொடங்கி இருக்கிறார்.
இந்த வருடம் இஸ்ரோ விஞ்ஞானிகள் தேர்வுக்காக கிட்டத்தட்ட 16,000 பேர் கலந்து கொண்டிருந்தனர். அதில் 9 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டிருந்தனர். அந்த 9 பேரில் பிரதமேஷும் இஒருவர்.
இந்த வெற்றிக்கு காரணம் தனது 10 ஆண்டுகளாக கடுமையான உழைப்பு மட்டுமே எனப் புன்னகை மாறாமல் கூறும் பிரதமேஷ வாழ்த்துவோம். தற்போது சண்டிகர் நகரில் பணி உத்தரவைப் பெற்றிருக்கிறார் பிரதமேஷ்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.