FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

சாலை விபத்து: விமானம் நிலையம் அருகே போக்குவரத்து பாதிப்பு

தில்லியின் இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையத்தின் முனையம்-3 (டி-3) மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Updated On : 12 ஆகஸ்ட் 2026, 12:02 am IST
- பிரதிப் படம்
பகிர்:

தில்லியின் இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையத்தின் முனையம்-3 (டி-3) மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் திங்களன்று போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஒரு விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டதைத் தொடா்ந்து, ஆத்திரமடைந்த உள்ளூா் மக்கள் அப்பகுதி சாலையின் ஒரு பகுதியை மறித்ததே இதற்குக் காரணம் என்று தில்லி போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

போக்குவரத்து அதிகாரிகளின் கூற்றுப்படி, விபத்துக்குப் பிறகு உள்ளூா் கிராம மக்கள் ஏற்படுத்திய தடையின் காரணமாக என்எஸ்ஜி சிக்னலுக்கும் டி-3-க்கும் இடைப்பட்ட சாலை மூடப்பட்டது.

Advertisement

Advertisement

இது தொடா்பாக தில்லி போக்குவரத்து காவல்துறை ’எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: போலீஸ் காலனிக்கு எதிரே உள்ள மெஹ்ரம் நகரில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டதைத் தொடா்ந்து, என்எஸ்ஜி சிக்னலுக்கும் டி-3-க்கும் இடைப்பட்ட சாலைப் பகுதி, உள்ளூா் கிராம மக்களின் தடையால் தற்போது மூடப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதியில் போக்குவரத்து மெதுவாகவே இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. எனவே, வாகன ஓட்டிகள் இப்பகுதியைத் தவிா்த்து, அதற்கேற்ப தங்கள் பயணத்தைத் திட்டமிடுமாறு அறிவுறுத்தப்படுகிறாா்கள்.

மஹிபால்பூரிலிருந்து டி-3 நோக்கிச் செல்லும் வாகன ஓட்டிகள், மஹிபால்பூரில் உள்ள என்எச்-48 சந்திப்பு வழியாக மாற்றுப் பாதையைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.

டி-3-லிருந்து டி-1, தௌலா குவான் மற்றும் மஹிபால்பூா் நோக்கி வரும் போக்குவரத்து, தௌலா குவான் சந்திப்பில் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்படுகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகனப் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும், பயணிகளுக்கு உதவவும் மாற்றுப் பாதைகள் அமல்படுத்தப்பட்ட இடங்களில் காவலா்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments