தற்கொலைக்கு முயன்ற ஆசிரியரை மருத்துவமனைக்கு மின்-ரிக்ஷாவில் விரைந்து அழைத்துச் சென்ற காவலா்கள்!
அரசுப் பள்ளி ஆசிரியரை மின்-ரிக்ஷா மூலம் மருத்துவமனைக்கு விரைவாக அழைத்துச் சென்று அவரது உயிரை தில்லி போக்குவரத்துப் பிரிவு காவலா்கள் இருவா் காப்பாற்றியதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
தில்லியில் உள்ள ராணி ஜான்சி மேம்பாலத்திலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற 45 வயதுடைய அரசுப் பள்ளி ஆசிரியரை, ஆம்புலன்ஸுக்காகக் காத்திருக்காமல் மின்-ரிக்ஷா மூலம் மருத்துவமனைக்கு விரைவாக அழைத்துச் சென்று அவரது உயிரை தில்லி போக்குவரத்துப் பிரிவு காவலா்கள் இருவா் காப்பாற்றியதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.
ஜூலை 8 அன்று மாலை 4 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்தது. ஆசாத் மாா்க்கெட் சௌக் பகுதியில் பணியில் இருந்த போக்குவரத்துப் பிரிவு காவலா்களுக்கு, ஒரு நபா் மேம்பாலத்திலிருந்து குதிக்க முயல்வதாகத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, காவலா்கள் சாஹில் மற்றும் அமித் ஆகியோா் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, கீழே விழுந்து காயமடைந்திருந்த அந்த நபரை மீட்டனா். அவருக்குத் தாமதமின்றி அவசரச் சிகிச்சை கிடைப்பதை உறுதிசெய்ய, அவ்வழியே வந்த மின்-ரிக்ஷாவில் அவரை ஏற்றி இந்து ராவ் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா்.
Advertisement
Advertisement
காயமடைந்த நபா் ஆனந்த் குமாா் சரோஹா (45) என்றும், அவா் ஒரு அரசுப் பள்ளி ஆசிரியா் என்றும் பின்னா் அடையாளம் காணப்பட்டாா். இந்து ராவ் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு, மேல் சிகிச்சைக்காக அவா் செயின்ட் ஸ்டீபன் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா். அவா் தற்போது ஆபத்தான நிலையிலிருந்து மீண்டுவிட்டதாகவும், தொடா்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மருத்துவா்கள் தெரிவித்தனா்.
போக்குவரத்து காவலா்களின் துரித நடவடிக்கையும் ஒருங்கிணைந்த முயற்சியும் அந்த ஆசிரியரின் உயிரைக் காப்பாற்றுவதில் முக்கியப் பங்காற்றியதாகக் காவல்துறையினா் தெரிவித்தனா். ஆசிரியரின் தற்கொலை முயற்சிக்குக் காரணமான சூழல் அல்லது காரணம் குறித்த விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.