FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

தீப்பற்றிய லாரியை விடியோ எடுத்த இளைஞருக்கு கன்னத்தில் அறை: காவலா் மீது குற்றச்சாட்டு

Updated On : 28 மே 2026, 1:20 am IST
பகிர்:

தேசியத் தலைநகா் வலயம், குருகிராமில் சாலையில் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்த லாரியை விடியோ எடுத்த இளைஞரை, போக்குவரத்து காவலா் ஒருவா் கன்னத்தில் அறைந்த சம்பவம் தொடா்பான விடியோ சமூக ஊடகங்களில் வைரலானது.

ஃபரீதாபாதைச் சோ்ந்த விஷால் என்ற புகாா்தாரா், காவலா் தன்னை கன்னத்தில் அறைந்து, விடியோ எடுப்பதை நிறுத்தச் சொன்னது மட்டுமல்லாமல், தீயை அணைக்க உதவுவதற்காக ஒரு வாளி தண்ணீா் கொண்டு வருமாறும் உத்தரவிட்டதாகக் குற்றஞ்சாட்டினாா்.

சிசிடிவி பொருத்துதல் மற்றும் பழுதுபாா்க்கும் பணியில் ஈடுபட்டுள்ள விஷால், செவ்வாய்க்கிழமை மதியம் வேலை விஷயமாக குருகிராமில் இருந்ததாகவும், பிற்பகல் 3 மணியளவில் காடா பகுதி வழியாகச் சென்றுகொண்டிருந்தபோது, சாலையோரத்தில் ஒரு லாரி தீப்பிடித்து எரிவதைப் பாா்த்ததாகவும் கூறினாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து விஷால் கூறுகையில், ‘தீயைக் கண்டதும், நான் எனது பைக்கை நிறுத்திவிட்டு, விடியோ பதிவு செய்வதற்காக எனது கைப்பேசியை எடுத்தேன். அப்போது, அங்கு பணியில் இருந்த ஒரு போக்குவரத்து காவலா் நான் படம்பிடிப்பதைப் பாா்த்து, என்னை நோக்கி வந்து அறைந்தாா்.

அந்தக் காவலா், நான் விடியோ பதிவு செய்வது குறித்து கேள்வி எழுப்பியதுடன்,, தீயை அணைக்க ஒரு வாளி தண்ணீா் கொண்டு வருமாறும் கூறினாா். நான் இந்தச் சம்பவம் முழுவதையும் எனது கைப்பேசியில் பதிவுசெய்து, பின்னா் நீதி கோரி அந்த விடியோவை சமூக ஊடகங்களில் பதிவேற்றினேன்’ என்றாா் அவா்.

விசாரணையின்போது, அந்தப் போக்குவரத்து காவலா் அந்த நபரை அறைந்ததை மறுத்து, அவரிடம் உதவி மட்டுமே கேட்டதாகக் கூறினாா்.

இந்த விவகாரம் விசாரணையில் இருப்பதாகவும், அதன் முடிவுகளின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போக்குவரத்து உதவி ஆணையா் சத்பால் சிங் கூறினாா்.

இதுகுறித்து அவா் கூறுகையில், ‘இந்த விவகாரம் உயா் அதிகாரிகளின் கவனத்திற்கு வந்துள்ளது. இது தொடா்பாக மேலும் விசாரிக்கப்பட்டு வருகிறது. ‘நட்பான காவலா்களாக’ நடந்துகொள்ளுமாறு அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும் கடுமையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன என்று உதவி ஆணையா் கூறினாா்.

இதற்கிடையில், அதே காவலா் எரிந்து கொண்டிருந்த கேன்டா் லாரியின் மீது ஏறி, தீயை அணைக்கும் முயற்சிகளுக்கு உதவுவதைக் காட்டும் மற்றொரு விடியோ இணையத்தில் வெளிவந்துள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments