புறநானூறு பதிப்பு வரலாறு
புறநானூறு பதிப்பு வரலாறு (1894-2010) - முனைவர் அ.செல்வரசு; பக்.256; ரூ.200; காவ்யா, சென்னை-24; )044-2372 6882. நற்றிணை, குறுந்தொகை, கலித்தொகை, பரிபாடல், அகநானூறு ஆகிய சங்க இலக்கிய நூல்களின் பதிப்பு வர
புறநானூறு பதிப்பு வரலாறு (1894-2010) - முனைவர் அ.செல்வரசு; பக்.256; ரூ.200; காவ்யா, சென்னை-24; )044-2372 6882.
நற்றிணை, குறுந்தொகை, கலித்தொகை, பரிபாடல், அகநானூறு ஆகிய சங்க இலக்கிய நூல்களின் பதிப்பு வரலாறு 2010-ஆம் ஆண்டு பதிப்பாக முன்பே வெளிவந்திருக்கிறது. இவ்வாண்டின் புதிய பதிப்பு வரவு இந்நூல்.
சிறப்பு வாய்ந்த புறநானூறு உ.வே.சா.(1894) தொடங்கி, இன்றுவரை பல பதிப்புகளைக் கண்டிருப்பினும், அதிகாரப்பூர்வமான பதிப்புகள் வெளிவரவில்லை என்றும், அவ்வாறான பதிப்பு எதிர்காலத்தில் வெளிவரும் நிலையில் கவனத்தில் கொள்ள வேண்டிய இன்றியமையாத சில சிந்தனைகளைப் பட்டியலிட்டுள்ளார் நூலாசிரியர். ஒரே நூலுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட சுவடிகள் கிடைக்கப்பெற்ற நிலையில், பாட வேறுபாடுகளைத் (பாடபேதம்) தவிர்க்க முடியாது என்பது அனைவரும் அறிந்ததே.
"அவ்வாறு உள்ள பாடபேதங்களை உ.வே.சா. குறிப்பிட்டிருக்கிறார். புறநானூற்றுக்கு உரை எழுதியவர்கள் பெரும்பாலும், பாட பேதங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. உரை எழுதியவர்கள் மூலப்பாடல் எந்தப் பதிப்பை அல்லது யாருடைய பதிப்பை அடிப்படையாகக் கொண்டுள்ளது என்பதையும் குறிப்பிட்டால்தான் அது பதிப்பு நேர்மையாக இருக்கும்' என்று நூலாசிரியர் முன்வைக்கும் இந்த யோசனைகளை ஏற்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.
இதுபோன்ற பதிப்பு வரலாறுகள் சங்க இலக்கியங்கள் அனைத்துக்கும் வெளிவந்தால்தான் நாம் சென்ற நூற்றாண்டின் பண்டைத் தமிழர்கள் பற்றியும், கல்வி முறை பற்றியும் அறிந்து கொள்ள முடியும். இவ்விதமான பதிப்பு வரலாறுகள்தாம் ஆவணங்களாகப் போற்றப்படும். "புறநானூறு' தொடர்பாக நூலாசிரியரின் "தேடுதல்' வேட்டையில் உருவான இந்நூல் அவருக்கு மட்டுமல்ல, தமிழிலக்கியத்துக்குக் கிடைத்த ஒரு புதையல்.