காரைக்கால் அம்மையார்
காரைக்கால் அம்மையாரின் வாழ்வும், வாக்கும் என்றும் நமக்கு வழிகாட்டுவனவாக உள்ளன என்பதே இந்நூல் தெரிவிக்கும் கருத்து.
காரைக்கால் அம்மையார்-தரணி பாஸ்கர்; பக். 136; ரூ. 140; அருட்செல்வர் நா. மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம், பொள்ளாச்சி- 642 003, ✆ 04259-236 030.
சிவபெருமானால் அம்மையே என அழைக்கப்பெற்ற சிறப்புக்குரியவர் காரைக்கால் அம்மையார். கயிலைக்கு தலையால் நடந்து சென்று சிவனருள் பெற்றவர். அவரின் பிறப்பு, திருமணம், இறைவனிடம் மாங்கனி பெற்றது, சிவனிடம் பேய் வடிவம் வேண்டும் என்று வரம் பெற்றது என அவரது வரலாறு, இயற்றிய நூல்கள், சைவ சித்தாந்த கருத்துகள், திருவாலங்காட்டில் இறைவன் நடனம் என்று காரைக்கால் அம்மையாரின் அனைத்து விவரங்களும் பாடல் குறிப்புடன் விளக்கமாக தரப்பட்டுள்ளன.
அம்மையாரைப் பற்றி திருத்தொண்டத் தொகையில் இடம்பெற்றுள்ள குறிப்புகள் அவரது பெருமையை உணர்த்துகிறது. சுந்தரர் "பெருமிழலைக் குறும்பார்க்கும் பேயார்க்கும் அடியேன்' என்று பாடியுள்ள பாடல் காரைக்கால் அம்மையார் பேய் வடிவை இறைவனிடம் வேண்டிப்பெற்றார் என்பதை உணர்த்துகிறது.
Advertisement
Advertisement
திருநாவுக்கரசர் கயிலைக்கு திருமேனி வருந்த நடந்து சென்றார். ஆனால், காரைக்கால் அம்மையாரோ திருக்கயிலை இறைவன் தலமாதலால் காலால் நடந்து செல்வது தகுதியன்று என்று தலையால் நடந்து சென்றார் என்றும், தன் கணவர் தன்னை துறந்ததும் இறைவன் அருள்பெற்று சிவபெருமானை நோக்கிப்பாடிய முதல் நூல் அற்புத திருவந்தாதி என்றும் சேக்கிழார் பெருமான் பாடியுள்ளார்.
"எரிபாய்ந்து ஆடும் இடம் காட்டுவாய்' என வேண்டிய அம்மையார்க்கு திருவாலங்காட்டை காட்டியவர் இறைவன். அங்குதான் சிவபெருமானின் நடனத்தைக் கண்டு இரண்டு திருப்பதிகங்களைப் பாடி அம்மையார் வழிபட்டார். அற்புத திருவந்தாதி, திரு இரட்டை மணிமாலை, திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள் என அம்மையாரின் படைப்புகள் சிவத்தொண்டர்களுக்கு தித்திப்பு தருவனவாகும்.
காரைக்கால் அம்மையாரின் வாழ்வும், வாக்கும் என்றும் நமக்கு வழிகாட்டுவனவாக உள்ளன என்பதே இந்நூல் தெரிவிக்கும் கருத்து.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.