சேலம் அம்மம்பாளையத்தில் நாளை சுவாமி சிவானந்தர் ஜென்ம தினவிழா
சித்த வித்தையை அருளிய வடகரை சுவாமி சிவானந்த பரமஹம்சரின் ஜென்ம தினமாகிய திருக்கார்த்திகைத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை (டிச. 3) கொண்டாடப்படுகிறது.
சித்த வித்தையை அருளிய வடகரை சுவாமி சிவானந்த பரமஹம்சரின் ஜென்ம தினமாகிய திருக்கார்த்திகைத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை (டிச. 3) கொண்டாடப்படுகிறது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அம்மம்பாளையத்தில் அமைந்துள்ள அவரது ஆசிரமத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்குத் தொடங்கி நாள் முழுவதும் விழா நடைபெறுகிறது.
சித்த வித்தை பயிற்சி, ஜபம், நிஷ்டை, ஆன்மிகச் சொற்பொழிவுகள், அன்னதானம் ஆகிய நிகழ்வுகள் நடைபெறவுள்ளதாக ஆசிரமத் தலைவர் எஸ். ஸுனீதி தெரிவித்துள்ளார். இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சித்தவித்தை சாதகர்கள் பங்கேற்க உள்ளனர்.
சித்தவித்தை எனப்படும் அழியா கலையான வாசியோகத்தை அருளியவர் சுவாமி சிவானந்தர். கேரள மாநிலம் வடகரையில் தோன்றிய இவர், 100 ஆண்டுகளுக்கு முன்னர் பழனி மலையில் போகர் சித்தர் அருகில் தவம் இருந்து ஜீவசமாதி எய்தினார்.
தமிழகத்தில் அம்மம்பாளையத்திலும் கேரளத்தில் 4 இடங்களிலும் இவரது சித்த ஆசிரமங்கள் அமைந்துள்ளன.
தமிழகத்தில் பல இடங்களில் சித்தவித்தை பயிற்சி நிலையங்களில் இளைஞர்கள் வாசியோகம் பயின்று வருகின்றனர். சென்னையில் இருந்து 50-க்கும் மேற்பட்ட சாதகர்கள் இவ்விழாவில் பங்கேற்கவுள்ளதாக சென்னை சித்தவித்தை அப்பியாச நிலையத்தின் தலைவர் பிரம்மஸ்ரீ கோதண்டம் தெரிவித்தார்.