முகப்பு
செய்திகள்

கூர்ம ஜெயந்தியான இன்று இதைச் செய்ய மறக்காதீர்கள்!

இன்று கூர்ம ஜெயந்தி. மஹா விஷ்ணு ஆமை வடிவம் எடுத்த அவதாரம் தான் கூர்ம ஜெயந்தியாகக் கொண்டாடப்படுகிறது.

Updated On : 10 ஜூலை, 2018 at 3:59 PM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:41 PM

இன்று கூர்ம ஜெயந்தி. மஹா விஷ்ணு ஆமை வடிவம் எடுத்த அவதாரம் தான் கூர்ம ஜெயந்தியாகக் கொண்டாடப்படுகிறது.

ஆனி மாதத்தில் தேய்பிறையில் வரும் துவாதசி திதியில் தேவர்களை காக்க திருமால் எடுத்த அவதாரமே கூர்ம அவதாரம் ஆகும். 

திருமால் அவதரித்த தசாவதாரங்களில் இரண்டாவது அவதாரம் கூர்ம அவதாரமாகும். கூர்மம் என்றால் ஆமை எனப் பொருள். அத்தகைய ஆமை வடிவம் கொண்டு பல நன்மைகள் ஏற்படக் காரணமாக இருந்தது. அதன்படி இன்று அனைத்துப் பெருமாள் கோயில்களிலும் கூர்ம ஜெயந்தி சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடத்தப்படுகிறது. 

Advertisement

கூர்மஅவதாரம் தோன்றிய கதை

துர்வாச முனிவரின் சாபத்தால் அனைத்து செல்வத்தையும், பதவியையும் தேவேந்திரன் இழந்தான். இதை அறிந்த அசுரர்கள் தேவர்களுடன் போரிட்டனர். தேவர்கள் அசுரர்களை கொல்ல அசுரர்களின் குருவான சுக்கிராச்சாரியார் சிவபெருமானிடம் பெற்ற சஞ்சீவினி மந்திரத்தால் இறந்த அசுரர்களை உயிர் பெறச் செய்தார். இதனால் மிகவும் சோர்ந்த தேவர்கள் விஷ்ணுவைக் கண்டு இதற்கு ஒரு தீர்வு அளிக்குமாறு வேண்டினார்கள். திருமால் மந்திரமலையைக் கொண்டு பாற்கடலை கடைய அதில் இருந்து கிடைக்கும் அமிர்தத்தை உண்டால் மட்டுமே நீங்கள் போரில் வெற்றி பெற இயலும் என்று கூறினார்.

பாற்கடலை கடைய தேவர்களின் பலம் மட்டும் போதுமானதாக இருக்காது என எண்ணி, இந்திரன் அசுரர்களுடன் சமாதானம் பேச சென்று அவர்களை சம்மதிக்க வைத்தார். திருமால் முன்னிலை நின்று மந்திரமலையை மத்தாகவும், வாசுகி பாம்பினை கயிராகவும் கொண்டு கடைய பருமன் தாங்காமல் மலையானது புரண்டு விழவும் தேவர்கள் மற்றும் அசுரர்கள் இது பயனற்ற செயலாகக் கருதினர்.

தேவர்களின் இன்னல்களை போக்கவும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கவும் திருமால் மிகப்பெரிய கூர்மமாக (ஆமை வடிவம்) அவதாரம் எடுத்து பாற்கடலில் நுழைந்து மந்திரமலையை தாங்கிக் கொண்டார். அதன் பின் தேவர்களும், அசுரர்களும் மலையை கடைய அதில் இருந்து காமதேனு, கற்பக விருச்சகம், வெண் குதிரை, அப்சர கன்னிகள், ஐரோத வதம், திருமகள் இறுதியாக அமிர்தத்தை ஏந்திய தன்வந்திரியும் வெளிப்பட்டார். தேவர்களும், பூவுலகமும் நன்மை பெற வேண்டும் என எண்ணி கூர்ம மூர்த்தியாக அவதாரம் கொண்டார் திருமால்.

கூர்ம அவதாரம் என்பது யாரையும் அழிப்பதற்காக எடுக்கப்படாமல் அனைவரும் நல்லமுறையில் வாழ வேண்டும் என எடுக்கப்பட்ட மகத்தான அவதாரம் ஆகும். எனவே ஒருவரின் உருவமைப்பு கொண்டு அவரை இகழாமல் அவரிடம் உள்ள உண்மையும், பெருமையையும் உணர்ந்து போற்ற வேண்டும் என்பதை உணர்த்துவதே கூர்ம அவதாரத்தின் நோக்கமாகும்.

இந்த வழிபாட்டை மேற்கொள்வதால் சனி கிரக பீடைகள் விலகும் என்பது ஐதீகம். இந்நாளில் கூர்ம அவதார மூர்த்தியைப் பிரார்த்தனை செய்பவர்களுக்கு, அவர் சரித்திரத்தைப் பயபக்தியோடு சிந்தித்து அவரைத் தியானம் செய்பவர்களுக்குச் சகல சம்பத்தும், தீர்க்க ஆயுளும் உண்டாகும். 

திருமால் சயங்காலத்தில் கூர்ம அவதாரம் எடுத்ததால் இன்று மாலை அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று மஹாவிஷ்ணு அஷ்டோத்திரங்களை சொல்லி தங்களால் முடிந்த நிவேதனம் படைத்து வழிபடலாம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.