காரைக்கால் அம்மையாருக்கு காட்சியளித்த கைலாசநாதர் உற்சவம்
காரைக்கால் மாங்கனித் திருவிழா நிறைவையொட்டி, அம்மையாருக்கு கைலாச வாகனத்தில் ஸ்ரீ கைலாசநாதர் காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
காரைக்கால் மாங்கனித் திருவிழா நிறைவையொட்டி, அம்மையாருக்கு கைலாச வாகனத்தில் ஸ்ரீ கைலாசநாதர் காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
மாங்கனித் திருவிழாவில், சிவபெருமான் பிச்சாண்டவர் கோலத்தில் அம்மையார் கோயிலுக்கு சென்ற நிகழ்ச்சி புதன்கிழமை இரவு நடைபெற்றது. அமுது படையல் நிறைவையொட்டி, ஸ்ரீ சித்தி விநாயகர் கோயிலில் அம்மையார் கணவரான பரமதத்தர் 2 -ஆவது திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. இரவு 12 மணியளவில் ஸ்ரீ புனிதவதியார் புஷ்ப சிவிகையில் ஸ்ரீ சித்தி விநாயகர் கோயிலுக்கு எழுந்தருளினார். பரமதத்தர், 2 -ஆவது மனைவி ஆகியோர் புனிதவதியாரை வணங்கும் நிகழ்வைத் தொடர்ந்து, புனிதவதியார் பேய் உருவம் ஏற்று ஸ்ரீ சோமநாதர் கோயிலுக்கு எழுந்தருளினார்.
அம்மையார் பேய் உருவம் கொண்டு வீதியுலா கொண்டு செல்லும் நிகழ்வு வியாழக்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் நடைபெற்றது. வீதியுலாவின்போது பாரதியார் சாலையில் மின்விளக்குகள் அணைக்கப்பட்டன. இருளில் பேய் உருவம் கொண்ட அம்மையார் ஊர்வலம் நடைபெற்றது. ஸ்ரீ சுந்தராம்பாள் சமேத ஸ்ரீ கைலாசநாதர், கைலாச வாகனத்தில் பெருமாள் கோயில் அருகே எழுந்தருளி, அம்மையாருக்கு காட்சியளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அம்மையார் கைலாசநாதர் அருகே வந்தபோது, சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து அம்மையார் ஸ்ரீ சோமநாதர் கோயிலுக்கு எழுந்தருளச் செய்யப்பட்டார்.
கைலாச வாகனத்தில் சுவாமி, அம்பாள் பெரு வீதியுலா நடைபெற்றது. பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபாடு நடத்தினர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவல் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். நிகழ்ச்சிகள் அனைத்தும் கடந்த 4 நாள்கள் நடத்தப்பட்ட மாப்பிள்ளை (பரமதத்தர்) அழைப்பு, திருக்கல்யாணம், வெள்ளைச்சாற்று, பிச்சாண்டவர் வீதியுலா, அமுதுபடையல், இறைவன் காட்சி தருதல் ஆகியவற்றுடன் நிறைவுற்றது.
விடையாற்றி நிகழ்ச்சி ஜூலை 27-ஆம் தேதி நடைபெறுகிறது. அப்போது ஸ்ரீ பிச்சாண்டவர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது. ஜூலை 27-ஆம் தேதி வரை ஒரு மாத காலம் கோயில் மணிமண்டபத்தில் பல்வேறு இசை நிகழ்ச்சிகளும், திருவிழா கடைகளும் தொடர்ந்து நடைபெறும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.