மதுரை மீனாட்சியம்மன் சித்திரைத் திருவிழா: கொடியேற்றத்துடன் தொடங்கியது!
மதுரை மீனாட்சியம்மன் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
முன்னதாக சுவாமி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டு, கோயிலுக்குள் வாஸ்து சாந்தி (நிலத்தேவா் வழிபாடு) நடைபெற்றது.
தொடர்ந்து, சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கொடியேற்றம் நடைபெற்றது. இன்று முதல் தினசரி காலை, மாலை வேளைகளில் சுவாமி, அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி நான்குமாசி வீதிகளை வலம் வந்து அருள்பாலிக்கின்றனர்
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா இன்று முதல் ஏப்ரல் 23 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
Advertisement
Advertisement
திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளான மீனாட்சியம்மன் பட்டாபிஷேகம் வருகிற ஏப். 19-ஆம் தேதியும், மறுநாள் 20-ஆம் தேதி திக்குவிஜயமும், அடுத்த நாள் 21-ஆம் தேதி மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கல்யாணமும், அன்றிரவு திருக்கல்யாண கோலத்தில் சுவாமி அம்மன் பூப்பல்லக்கு பவனியும், 22-ஆம் தேதி அதிகாலையில் நான்குமாசி வீதிகளில் தேரோட்டமும் நடைபெறுகிறது.
சித்திரை திருவிழாவின் முத்தாய்ப்பான நிகழ்வுகளான கள்ளழகா் எதிர்சேவை ஏப்ரல் 22 ஆம் தேதி இரவும், ஏப்ரல் 23 ஆம் தேதி அதிகாலை அழகா் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வும் நடைபெறவுள்ளன.
ஏப்ரல் 21 ஆம் தேதி கள்ளழகர் அழகர் மலையிலிருந்து மதுரையை நோக்கி புறப்படுகிறார். ஏப்ரல் 22 ஆம் தேதி காலை மூன்று மாவடியில் கள்ளழகருக்கு எதிர்சேவை நிகழ்வு நடைபெறுகிறது.
ஏப்ரல் 23 ஆம் தேதி அதிகாலை 5.51 மணியிலிருந்து 6.10 மணிக்குள் சித்திரைத் திருவிழாவின் சிகர நிகழ்வான கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வு நடைபெறுகிறது. தொடர்ந்து, ராமராயர் மண்டபத்தில் தண்ணீர் பீய்ச்சும் நிகழ்வு நடைபெறுகிறது.
ஏப்ரல் 24 ஆம் தேதி கள்ளழகர் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தலும், அதனைத் தொடர்ந்து ராமராயர் மண்டபத்தில் தசாவதார நிகழ்வு நடைபெறுகிறது. ஏப்ரல் 26 ஆம் தேதி அதிகாலை பூ பல்லக்கில் எழுந்தருளும் கள்ளழகர், அழகர் மலையை நோக்கி புறப்படுகிறார். ஏப்ரல் 27 ஆம் தேதி கள்ளழகர் அழகர் மலைக்கு வந்தடைகிறார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.