மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரைப் பெருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்!
மதுரை மீனாட்சியம்மன் கோயில் கொடியேற்றம் தொடக்கம் தொடர்பாக...
மதுரை அருள்மிகு மீனாட்சியம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கோயில் சித்திரைத் திருவிழா இன்று(ஏப். 19) காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. ஆயிரகணக்காக பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான சித்திரைத் திருவிழா ஆண்டு தோறும் வெகுவிமர்சையாக கொண்டாப்பட்டு வருகிறது.
விழாவில் முக்கிய நிகழ்ச்சிகளான மீனாட்சியம்மன் திருக்கல்யாணம், அழகரின் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவத்தைக் காண பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள், மதுரையில் கூடுவார்கள்.
Advertisement
அந்த வகையில் சிறப்பு பெற்ற மதுரை மீனாட்சியம்மன் திருக்கோயிலில் சித்திரைத் திருவிழா இன்று காலை சுவாமி சந்நிதி முன்பாக உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்ற நிகழ்ச்சியுடன் வெகுவிமர்சையாக தொடங்கியது.
முன்னதாக கொடிமரம் முன்பு மீனாட்சி, சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடன் எழுந்தருள, சிறப்பு பூஜைகளைத் தொடர்ந்து, மங்கள வாத்தியங்கள் வேதமந்திரங்கள் முழங்கிட இன்று காலை 10.35 மணிக்கு மேல் 10.59 மணிக்குள் மிதுன லக்னத்தில் கொடி ஏற்றம் நடைபெற்றது
சித்திரை திருவிழா இன்று துவங்கியுள்ள நிலையில் அம்மனும் சுவாமியும் தினமும் காலை, மாலை ஆகிய இரு வேளைகளில் மீனாட்சி சுந்தரேசுவரர் பிரியாவிடையுடனும், மீனாட்சி அம்மன் தனியாகவும் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாசி வீதிகளில வலம் வருவர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் வருகிற 26-ஆம் தேதியும், திக்கு விஜயம் 27-ஆம் தேதியும், மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் 28-ஆம் தேதியும், தேரோட்டம் 29-ஆம் தேதியும், தீர்த்தவாரி 30-ஆம் தேதியும் நடைபெறும்.
இதன் பிறகு, கள்ளழகர் கோயில் திருவிழாவை முன்னிட்டு, வருகிற 30-ஆம் தேதி கள்ளழகர் எதிர்சேவை நிகழ்வும், மே 1-ஆம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வும் நடைபெறும்.
இதற்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் ருக்மணி தியாகராஜன், கோயில் இணை ஆணையர் நா. சுரேஷ் ஆகியோர் தலைமையிலான அலுவலர்கள் செய்து வருகின்றனர்.