வரதராஜ பெருமாள் கோயிலில் யாளி வாகன வீதியுலா ரத்து: பக்தர்கள் ஏமாற்றம்!
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் யாளி வாகன வீதி உலா உற்சவம் ரத்து செய்தது பற்றி..
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் யாளி வாகன வீதி உலா உற்சவம் ரத்து செய்ததால், உற்சவத்தைக் காண காத்திருந்த பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோயிலில் வைகாசி பிரம்மோற்சவம் கடந்த 28ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் மூன்று நாள்கள் வைகாசி பிரம்மோற்சவம் முறையாக நடைபெற்று முடிந்த நிலையில் நேற்று நான்காம் நாள் நாக வாகன உற்சவத்தின்போது சுவாமியை தூக்கிச் செல்லும் தடியில் விரிசல் ஏற்பட்டதாகக் கூறி நாக வாகன வீதி உலா உற்சவம் தொடங்கிய சிறிது நேரத்தில் ரத்து செய்யப்பட்டு மீண்டும் கோயிலுக்கு சுவாமியை கொண்டு வந்துவிட்டனர்.
இந்த நிலையில் வைகாசி பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாள் காலை தங்க பல்லக்கில் வரதராஜ பெருமாள், நாச்சியார் திருக்கோலத்தில் எழுந்தருளி, கோயிலுக்கு பணம் கட்டியவர்களுக்காக, வீதி வீதியாகச் சென்று காட்சி அளித்துவிட்டு இரவு 8 மணி அளவில் கோயிலுக்குத் திரும்பினார். இதனைத் தொடர்ந்து யாளி வாகன வீதி உலா உற்சவத்திற்காக வரதராஜ பெருமாள் மீண்டும் சிறப்பு அலங்காரத்தில் தயாராகி யாளி வாகனத்தில் எழுந்தருளினார்.
Advertisement
Advertisement
கோயிலில் இருந்து வீதி உலா உற்சவத்திற்காக யாளி வாகனம் தயாராகி புறப்பட்டு சன்னதி வீதி வரை சென்ற நிலையில் திடீரென கோயில் நிர்வாகம் யாளி வாகனம் வீதி உலா உற்சவத்தை ரத்து செய்வதாகக் கூறி வரதராஜப் பெருமாளை மீண்டும் கோயில் வாகன மண்டபத்திற்கு கொண்டு வந்து விட்டனர். யாளி வாகன வீதி உலா உற்சவம் ரத்து செய்யப்பட்டது பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தநிலையில் வெகுநேரமானாலும் சுவாமி வீதி உலா வருவார் என வழி நெடிகிலும் வீதிகளில் காத்திருந்த பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் நிர்வாகத்தின் அலட்சியத்தில் காரணமாக வைகாசி பிரம்மோற்சவத்தில் அடிக்கடி சுவாமி வீதி உலா ரத்து செய்யப்படும் சம்பவம், பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதோடு,
மீதமுள்ள உற்சவங்கள் முறையாக நடைபெறுமா அல்லது அவையும் ரத்து செய்யப்படுமோ என பக்தர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும், தவெக ஆட்சிக்கு வைணவ பக்தர்களிடையே களங்கம் ஏற்படுத்தும் வகையில் கோயில் நிர்வாகம் அலட்சியமாக பக்தர்களின் மனம் புண்படும் வகையில் செயல்படுகிறதா என கேள்வி எழுப்பி உள்ளனர்.