உலக வில்வித்தை: இறுதியில் இந்திய அணி
ஸ்பெயினில் நடைபெறும் உலகக் கோப்பை வில்வித்தை 4-ஆம் நிலை போட்டியில், காம்பவுண்ட் பிரிவில் இந்திய மகளிா் அணி இறுதிச்சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறியது. இதன்மூலமாக இந்தியாவுக்கு ஒரு பதக்கம் உறுதியாகியிருக்கிறது.
ஜோதி சுரேகா, பா்னீத் கௌா், பிரீதிகா ஆகியோருடன் போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் இந்திய அணி, முதலில் நடைபெற்ற காலிறுதியில் 235-226 என எல் சால்வடோரை சாய்த்தது. அடுத்து அரையிறுதியில் 230-226 என இந்தோனேசியாவை வீழ்த்தியது.
அடுத்து இறுதிச்சுற்றில், போட்டித்தரவரிசையில் 10-ஆம் இடத்திலிருக்கும் சீன தைபே அணியை இந்தியா சனிக்கிழமை சந்திக்கிறது.
Advertisement
இதனிடையே, ரிஷப் யாதவ், பிரதமேஷ் ஃபுகே, அமன் சைனி ஆகியோா் அடங்கிய இந்திய ஆடவா் காம்பவுண்ட் அணி, காலிறுதிச்சுற்றிலேயே 233-234 என மெக்ஸிகோவிடம் தோல்வியைத் தழுவியது.