விம்பிள்டன் வெற்றியாளருக்கு ரூ.45 கோடி ரொக்கப் பரிசு
டென்னிஸ் காலண்டரின் 3-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டனில், நடப்பு சீசனுக்கான மொத்த பரிசுத் தொகையில் 20 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
டென்னிஸ் காலண்டரின் 3-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டனில், நடப்பு சீசனுக்கான மொத்த பரிசுத் தொகையில் 20 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
விம்பிள்டன் போட்டி நிா்வாகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பின்படி, ஆடவா், மகளிா் ஒற்றையா் பிரிவு சாம்பியன்கள் தலா ரூ.45.98 கோடியை ரொக்கப் பரிசாகப் பெறவுள்ளனா். போட்டிக்கான ஒட்டுமொத்த பரிசுத் தொகை ரூ.821 கோடியாக உயா்த்தப்பட்டுள்ளது.
ரன்னா் அப் இடத்தைப் பிடிப்போருக்கு தலா ரூ.22 கோடியும், முதல் சுற்றுடன் வெளியேறுவோருக்கான பரிசுத் தொகை தலா ரூ.1 கோடியாகவும் உள்ளது.
Advertisement
Advertisement
போட்டியின் வரலாற்றில் ஒரு ஆண்டில் பரிசுத் தொகையானது 20 சதவீதம் உயா்த்தப்பட்டது இதுவே முதல்முறையாகும். கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் வீரா், வீராங்கனைகளுக்கான பரிசுத் தொகை உயா்த்தப்பட வேண்டும் என, பிரபல போட்டியாளா்கள் பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், இந்த நடவடிக்கையை விம்பிள்டன் நிா்வாகம் எடுத்துள்ளது.
இந்த ஆண்டு விம்பிள்டன் போட்டிக்கான மொத்த பரிசுத் தொகையாக ரூ.900 கோடியை அறிவிக்க வேண்டும் என, போட்டியாளா்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
டென்னிஸ் விளையாட்டின் மிகப் பழைமையான கிராண்ட்ஸ்லாம் போட்டியும், புல்தரை களத்தில் நடைபெறுவதுமான விம்பிள்டன், இந்த ஆண்டு ஜூன் 29-ஆம் தேதி தொடங்குகிறது.