நாளை என்பது வரும், சூரியன் உதிக்கும்..! தோல்விக்குப் பின் ஹார்திக் பாண்டியா நம்பிக்கை!
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா பேசியிருப்பதாவது...
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக தோல்வியுற்ற பிறகு, மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா, “நாளை என்பது வரும், சூரியன் உதிக்கும்” என நம்பிக்கையுடன் பேசியுள்ளார்.
மழையின் காரணமாக 11 ஓவர்களாகக் குறைக்கப்பட்ட இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் 150/3 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய மும்பை அணி 11 ஓவர்களில் 123/9 ரன்கள் எடுத்து தோல்வியுற்றது.
இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு மிகுந்த விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. வைபவ் சூர்யவன்ஷி பும்ராவின் முதல் பந்தை சிக்ஸர் அடித்து ஆச்சரியப்படுத்தினார். தோல்விக்குப் பின் கேப்டன் ஹார்திக் பாண்டியா பேசியிருப்பதாவது:
Advertisement
பவர்பிளேவில் நாங்கள் சரியாக பந்துவீசவில்லை; எதிரணி நன்றாக விளையாடினார்கள். எங்களது பந்துவீச்சாளர்கள் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். பந்துவீச்சு அணியாக நாங்கள் சரியாக விளையாடவில்லை; இதில் பேட்டிங்கை குறைகூற மாட்டேன்.
இது டி20 கிரிக்கெட். இதில் எப்போதுமே சில பந்துகளை நன்றாக வீச வேண்டும். ஒரே ஓவரில் 27 ரன்கள், அந்த ஐந்து பந்துகள் குறித்து பேச வேண்டும். இதுமாதிரி நல்ல பந்துகளை வீசியிருந்தால் நாங்கள் போட்டியில் இருந்திருப்போம். தொடக்க வீரர்கள் எங்களை போட்டியில் இருந்து நீக்கிவிட்டார்கள்.
இந்தப் போட்டியில் நடந்த தவறுகளில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும். நாளைக்கு காலை என்பது வரும், மீண்டும் சூரியன் உதிக்கும். அதனால், தவறுகளில் இருந்து கற்றுக்கொண்டு அடுத்த போட்டிக்கு நன்றாக தயாராக வேண்டும் என்றார்.
புள்ளிப் பட்டியலில் மும்பை அணி 3 போட்டிகளில் 2ல் தோல்வியுற்று ஏழாவது இடத்தில் இருக்கிறது. கடந்த 5 சீசன்களாக மும்பை அணி கோப்பை வெல்லாமலே இருக்கிறது.
கடந்த சீசனில் அரையிறுதிக்கு முன்னேறிய மும்பை இந்தியன்ஸ் அணி பஞ்சாப் கிங்ஸுடன் தோல்வியுற்றது. 2020ல் கோப்பை வென்ற பிறகு தொடர் சறுக்கல்களைச் சந்தித்து வருகிறது.