கிரிக்கெட் பேட் வாங்கக்கூட கையில் பணமில்லாத சோனல் தினுஷா; சாதனை படைத்தது எப்படி?
இந்தியாவுக்கு எதிராக அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை அணியின் இளம் வீரர் சோனல் தினுஷாவின் கிரிக்கெட் பயணம் பற்றி...
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் இலங்கை அணியின் இளம் வீரர் சோனல் தினுஷா அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
இந்திய அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி, இரண்டாவது போட்டி டிராவில் முடிந்ததால் தொடரை 1-0 என்ற கணக்கில் வென்றது. இந்திய அணி தொடரை முழுமையாக வெல்ல வாய்ப்பிருந்தும் அதனை தனது அபார ஆட்டத்தின் மூலம் தடுத்து நிறுத்தினார் இலங்கை அணியின் இளம் வீரர் சோனல் தினுஷா.
இந்தியாவுக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரில் சோனல் தினுஷா 140 என்ற நம்பமுடியாத சராசரியுடன் 420 ரன்கள் குவித்தார். அதில் 3 சதங்கள் மற்றும் ஒரு அரைசதம் அடங்கும். தினுஷாவின் அபார ஆட்டத்தால் இலங்கை அணி இரண்டாவது டெஸ்ட்டில் தோல்வியைத் தவிர்த்தது.
Advertisement
Advertisement
சோனல் தினுஷா கடந்து வந்த பாதை
இலங்கை அணிக்காக வெறும் 5 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள சோனல் தினுஷாவின் குடும்பம் பெரிதும் பொருளாதார நெருக்கடியிலேயே இருந்துள்ளது.
குடும்பத்தின் பொருளாதார சூழலினால் சோனல் தினுஷாவால் ஒரு கிரிக்கெட் பேட் வாங்கக்கூட முடியாத நிலையே இருந்தது. தினுஷாவின் சகோதரி வெளியே கடன் வாங்கி தனது சகோதரனுக்கு கிரிக்கெட் பேட்டினை பரிசாக அளித்துள்ளார். சோனல் தினுஷா அந்த பேட்டில்தான் முதன் முதலாக கிரிக்கெட் விளையாடத் தொடங்கியுள்ளார்.
சோனல் தினுஷாவின் கிரிக்கெட் பயணம் குறித்து அவரது பயிற்சியாளர் ஆஷன் பிரியஞ்சன் பகிர்ந்து கொண்டதாவது: இலங்கையில் உள்ள குழந்தைகள் கூடைப்பந்து விளையாடுவதில் ஆர்வமாக இருப்பார்கள். சோனல் தினுஷாவும் குழந்தைப் பருவத்தில் கூடைப்பந்து விளையாடுவதிலேயே ஆர்வம் செலுத்தினார். கூடைப்பந்து விளையாடுவதற்கு கடினமாக பயிற்சியும் மேற்கொண்டார்.
ஆனால், அவரது பள்ளிப்பருவ பயிற்சியாளர் சுஷாந்தா ஃபெலிக்ஸ் அவரது திறமையை கவனித்து அவரை கிரிக்கெட் அணிக்குள் எடுத்து வந்தார். அப்போது அவரிடம் கிரிக்கெட் உபகரணங்கள் எதுவுமே இல்லை. அப்போது அவரது சகோதரி கடன் வாங்கி அவருக்காக கிரிக்கெட் பேட்டினை வாங்கிக் கொடுத்தார். தினுஷாவின் குடும்பத்துக்கு பெரிய அளவில் வருமானம் கிடையாது. அவர்கள் தற்போது நல்ல நிலையில் இருக்கக் காரணம் சோனல் தினுஷாவே. சோனல் தினுஷா ஒருவரின் வருமானத்தில்தான் அவருடைய குடும்பம் இயங்கிக் கொண்டிருக்கிறது.
சோனல் தினுஷா அவருடைய அப்பா, அம்மா மற்றும் உடன் பிறந்தவர்களுடன் மிகவும் நெருக்கமாகக் இருக்கக் கூடியவர். அவருடைய குடும்ப உறுப்பினர்களை எந்த அளவுக்கு நேசிக்கிறாரோ அதே அளவுக்கு அவர் கிரிக்கெட்டினையும் நேசிக்கிறார்.
இந்திய அணியில் அனைத்து விதமான சுழற்பந்துவீச்சாளர்களும் இருக்கிறார்கள் என்பதால் அவர்களுக்கு எதிரான தொடருக்கு நன்றாக தயாராக வேண்டும் என இந்த தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பே தினுஷா என்னிடம் பேசினார். ஒவ்வொரு போட்டிக்கும் முன்பும் அவர் என்னை அழைத்துப் பேசுவார்.
பள்ளிப்பருவத்தில் விளையாடிய கிரிக்கெட் வீரராகவே சோனல் தினுஷாவை முதலில் எனக்குத் தெரியும். அந்த சமயத்தில் அவருக்கு 11 அல்லது 12 வயது இருக்கும். அந்த வயதிலேயே கிரிக்கெட் மீது அவர் மிகுந்த ஆர்வமும் அர்ப்பணிப்பும் மிகுந்தவராக இருந்தார்.
சோனல் தினுஷாவிடம் நீங்கள் நன்றாக ஸ்வீப் ஷாட்டுகள் விளையாட பழகிக் கொள்ள வேண்டும் எனக் கூறினேன். ஏனெனில், ஆசிய நாடுகளில் சுழற்பந்துவீச்சுக்கு எதிராக அவர் அதிகம் விளையாட வேண்டியிருக்கும் என்பதால் அந்த அறிவுரையை வழங்கினேன். அதன் பின், அவர் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக ஸ்வீப் ஷாட் விளையாடுவதற்கு பயிற்சி மேற்கொள்ள ஆரம்பித்தார் என்றார்.
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் மூலம் அனைவரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்த சோனல் தினுஷா, இனிவரும் காலங்களிலும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி பல்வேறு சாதனைகளை படைப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
About the cricketing journey of Sonal Dinusha, the young Sri Lankan player who put up a brilliant performance against India...
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.