நடப்பு டி20 உலகக் கோப்பைத் தொடரில் பந்துவீச்சில் சிறப்பாக செயல்படுவதற்கான ரகசியத்தை மேற்கிந்தியத் தீவுகள் வீரர் ஜேசன் ஹோல்டர் பகிர்ந்துள்ளார்.
டி20 உலகக் கோப்பைத் தொடரில் மும்பை வான்கடே திடலில் இன்று (பிப்ரவரி 15) நடைபெற்ற போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் நேபாளம் அணிகள் விளையாடின.
இந்தப் போட்டியில் நேபாளத்தை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி மேற்கிந்தியத் தீவுகள் அபார வெற்றி பெற்றது. மேலும், இதுவரை விளையாடியுள்ள மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று, சூப்பர் 8 சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெற்றது. நேபாளத்துக்கு எதிரான இன்றையப் போட்டியில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜேசன் ஹோல்டருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
இந்த நிலையில், கணிக்க முடியாத விதத்தில் பந்துவீசுவதும், அதிக அளவிலான யார்க்கர் பந்துகளை வீசுவதுமே நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் தான் சிறப்பாக பந்துவீசுவதற்கு காரணம் என ஜேசன் ஹோல்டர் மனம் திறந்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: பந்துவீச்சில் ஈடுபடும்போது, வெவ்வேறு கோணங்களில் பந்துவீச முயற்சி செய்கிறேன். என்னுடைய பந்துவீச்சை எளிதில் கணிக்க முடியாத அளவுக்கு வீசுவதற்கு முயற்சி செய்கிறேன். நிறைய யார்க்கர் பந்துகளை வீசுவதற்காக கிரீஸுக்கு முன்பு வெவ்வேறு இடங்களிலிருந்து பந்துவீசுகிறேன். என்னுடைய பந்துவீச்சை பேட்டர்கள் எளிதில் கணிக்க முடியாத அளவுக்கு பந்துவீச முயற்சி செய்கிறேன். குறிப்பிட்ட வீரர்களுக்காக வெவ்வேறு கோணங்களிலும் பந்துவீசுகிறேன் என்றார்.
நேபாளத்துக்கு எதிரான இன்றையப் போட்டியில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜேசன் ஹோல்டர், 4 ஓவர்களில் 27 ரன்களை விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடியுள்ள ஜேசன் ஹோல்டர், 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.