பிஎஸ்எல் தொடரில் இளஞ்சிவப்பு நிறமாக மாறிய வெள்ளைப் பந்து..! பாகிஸ்தானுக்கு அவமானம்!
பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் நடந்த சுவாரசியமான நிகழ்வு குறித்து...
பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் வெள்ளைப் பந்து இளஞ்சிவப்பு (பிங்க்) நிறமாக மாறிய நிகழ்ச்சி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது.
பாகிஸ்தானின் பிரபலமான டி20 லீக்கில் நடந்த இந்த நிகழ்வு ”பாகிஸ்தான் நாட்டிற்கே அவமானம்” என அந்நாட்டு ரசிகர்களே கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
இந்தியாவில் ஐபிஎல் போட்டிகள் போல பாகிஸ்தானில் பிஎஸ்எல் (பாகிஸ்தான் சூப்பர் லீக்) போட்டிகள் நடைபெறுகின்றன. இந்த சீசனின் முதல் போட்டியில் லாகூர் கலந்தர்ஸ் மற்றும் ஹைதராபாத் கிங்ஸ்மேன் அணிகள் மோதின.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லாகூர் அணி 20 ஓவர்களில் 199/6 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 130 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்தப் போட்டியில் ஹைதராபாத் அணியினர் அணிந்திருந்த இளஞ்சிவப்பு நிற ஜெர்ஸியில் பந்தினை தேய்க்க அது பந்தில் பதிந்தது. பொதுவாகவே பந்தினை பழபழப்பாக்க கிரிக்கெட் வீரர்கள் தங்களது உடையில் தேய்ப்பது வழக்கமான ஒன்று. ஆனால், பிஎஸ்எல் தொடரில் நடந்திருக்கும் இந்த நிகழ்வு அந்தத் தொடரின் மீது நன்மதிப்பை இழக்கச் செய்துள்ளது.
ஹைதராபாத் அணியின் கேப்டன் மார்னஸ் லபுஷேன், “பந்து சிவப்பு நிறமாக மாறுகிறதே? என்ன நடக்கிறது? என இரண்டாவது ஓவரிலேயே நடுவரிடம் இது குறித்து முறையிட்டேன். இது ஜெர்ஸியினால் ஏற்பட்டிருக்கும்.
சில நேரங்களில் பேட் அல்லது ஃபேட்டில் பட்டு நிறம் மாறுவதைப் பார்த்திருக்கிறேன். ஆனால், உடையினால் இப்படி ஆகிப் பார்த்ததில்லை. விரைவில் இதைச் சரிசெய்வார்கள் என நம்புகிறேன்” என்றார்.
ஹைதராபாத் கிங்ஸ்மேன் தனது எக்ஸ் பக்கத்தில், “முதல் பிங்க் பந்தில் வென்ற லாகூர் அணிக்கு வாழ்த்துகள்” என கிண்டலாக பதிவிட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டு ரசிகர்கள் இது மிகப்பெரிய அவமானம் எனக் கூறி வருகிறார்கள்.