மோசமான கேப்டன்சி; ரஹானேவை விமர்சித்த ஹர்பஜன் சிங்!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் மோசமான கேப்டன்சியை வெளிப்படுத்தியதாக அஜிங்க்யா ரஹானேவை இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் விமர்சித்துள்ளார்.
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் மோசமான கேப்டன்சியை வெளிப்படுத்தியதாக அஜிங்க்யா ரஹானேவை இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் விமர்சித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே திடலில் நேற்று (மார்ச் 29) நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸை வீழ்த்தியது.
இந்தப் போட்டியில் 221 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் சர்மா மற்றும் ரியான் ரிக்கல்டான் சிறப்பான தொடக்கத்தைத் தந்தனர். இந்த இணை முதல் விக்கெட்டுக்கு 148 ரன்கள் சேர்த்தது. ரோஹித் சர்மா 38 பந்துகளில் 78 ரன்களும், ரிக்கல்டான் 43 பந்துகளில் 81 ரன்களும் எடுத்தனர்.
இந்த நிலையில், பவர்பிளேவில் சுனில் நரைனைப் பயன்படுத்தி ரோஹித் சர்மாவின் விக்கெட்டினை வீழ்த்த தவறிவிட்டதாகவும், ரஹானேவின் கேப்டன்சி சிறப்பாக இல்லை எனவும் ஹர்பஜன் சிங் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ரோஹித் சர்மா பேட்டிங்கில் இருக்கும்போது, குறைந்த ஒன்று அல்லது இரண்டு ஓவர்களாவது சுனில் நரைனுக்கு வழங்கி அவரது விக்கெட்டினை வீழ்த்த முயற்சித்திருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால் மும்பை இந்தியன்ஸ் அணி விக்கெட்டுகளை இழந்து அழுத்தத்தில் இருந்திருக்கும். ஆனால், சுனில் நரைன் முழுவதுமாக நான்கு ஓவர்களை வீசவில்லை. இந்தப் போட்டியில் ரஹானேவின் கேப்டன்சி சிறப்பாக இல்லை. ரோஹித் சர்மா மற்றும் ரியான் ரிக்கல்டான் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினர் என்றார்.
நேற்றைய ஆட்டத்தில் சுனில் நரைன் 3 ஓவர்கள் வீசி 30 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.