வைபவ் சூர்யவன்ஷிக்கு பயம் துளியும் கிடையாது: ரவீந்திர ஜடேஜா
இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு பயம் என்பது துளியும் கிடையாது என ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் ரவீந்திர ஜடேஜா தெரிவித்துள்ளார்.
இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு பயம் என்பது துளியும் கிடையாது என ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் ரவீந்திர ஜடேஜா தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் குவாஹாட்டியில் நேற்று (மார்ச் 30) நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் சிஎஸ்கேவை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி பெற்றது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அதிரடியாக விளையாடிய இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி 15 பந்துகளில் அரைசதம் விளாசி அசத்தினார். அதிரடியாக விளையாடிய அவர் 17 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இந்த நிலையில், வைபவ் சூர்யவன்ஷி போட்டியில் எப்படி அதிரடியாக விளையாடுகிறாரோ அதே போன்றுதான் வலைப் பயிற்சியில் பேட்டிங் செய்யும்போதும் அதிரடியாக விளையாடுவார் என ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: வைபவ் சூர்யவன்ஷிக்கு எதிராக வலைப் பயிற்சியின்போது ஸ்டம்புக்கு பந்துவீச முடியாது. அவர் ஒவ்வொரு பந்தையும் சிக்ஸருக்கு விளாசுவார். அவருக்கு பயம் என்பது துளியும் கிடையாது. போட்டிகளில் எப்படி விளையாடுகிறாரோ அதே போன்றுதான் வலைப் பயிற்சியின்போதும் விளையாடுகிறார். புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும். புதிய பந்தில் அதிரடியாக விளையாடுவது மிகவும் கடினம். ஆனால், அவர் சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் மிகப் பெரிய ஷாட்டுகளை விளையாடி குறைந்த பந்துகளில் அரைசதம் விளாசினார் என்றார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக அதிரடியாக அரைசதம் விளாசிய வைபவ் சூர்யவன்ஷி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அதிவேகமாக அரைசதம் விளாசிய இரண்டாவது வீரர் என்ற சாதனையைப் படைத்ததும் குறிப்பிடத்தக்கது.